இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐநா வாக்கெடுப்பு! ஆப்சென்ட் ஆன இந்தியா! காரணம் இதுதான்
நியூயார்க்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐநாவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 43 நாடுகள் ஆப்சென்ட் ஆகியுள்ளன.
கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு -இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 41,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 95,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பாலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. இது சுதந்திர பாலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது.
இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் சில நாட்களுக்கு முன்னர் பலியானார். அடுத்த நாள் ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது.
இந்த இரண்டு கொலைகளும் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீது கடும் கோபத்தில் இருக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
சூழல் இப்படி இருக்கையில் காசாவில் நிலைமை ஒவ்வொரு நாளும் மோசமாகிக்கொண்டே இருக்கிறது. எனவே இஸ்ரேல் படைகள் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற வேண்டும் என்கிற கோஷம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனையடுத்து இது தொடர்பாக ஐநா பொதுச்சபையில் தீர்மானம் ஒன்றை பாலஸ்தீனம் கொண்டு வந்தது. அதன்படி, இஸ்ரேல் தங்கள் நாட்டின் மண்ணிலிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. இந்த தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடந்தது. இதில், தீர்மானத்திற்கு ஆதரவாக 124 நாடுகளும், எதிர்ப்பாக 14 நாடுகளும் வாக்களித்தன. இதில் வாக்களிக்காமால் 43 நாடுகள் ஆப்சென்ட் ஆகின. இதில் இந்தியாவும் ஒன்று.
இது குறித்து விளக்கமளித்த ஐநா அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பர்வதனேனி ஹரீஷ், "இரு தரப்பையும் சமாதானமாக, நெருக்கமாக கொண்டு வருவதே எங்களது நோக்கம். பேச்சுவார்த்தை மூலமே இதற்கு தீர்வு காண முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று கூறியுள்ளார். பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா மட்டுமே வாக்களிக்காமல் ஆப்சென்ட் ஆகியுள்ளது.
இந்தியா கடந்த காலங்களில் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்து வந்தது. ஆனால், தற்போது இதற்கு ஆதரவு அளிக்காமல் வாக்கெடுப்பை புறக்கணித்திருப்பது, பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் கொள்கை மாறியிருக்கிறதோ? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications