இஸ்ரோவுக்கு உதவும் எலான் மஸ்க்! ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ஏவப்படும் இந்திய செயற்கைக்கோள்!என்ன காரணம்
நியூயார்க்: இந்தியா தனது மிகப்பெரிய தொலை தொடர்பு செயற்கைக்கோளை, ஸ்பேஸ் எக்ஸ்ஸின் ஃபால்கன்-9 வகை ராக்கெட்டில் விண்ணில் ஏவ இருக்கிறது. இதுவரை இஸ்ரோ சார்பில் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டிருந்த நிலையில், முதல் முறையாக தற்போது ஃபால்கன்-9 ராக்கெட்டை இந்தியா நாடியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
சந்திரயான் 3 வெற்றி, ஆதித்யா எல்1 செயற்கைக்கோள், அதை தொடர்ந்து தற்போது அனுப்பப்பட்ட அதிநவீன எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் ஆகியவை சர்வதேச விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என குறிப்பிட்ட இடத்தை பெற்றுத் தந்திருக்கிறது. இப்படி இருக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான ஜிசாட்-20 (GSAT-20) செயற்கைக்கோள், ஸ்பேஸ் எக்ஸ்ஸின் ஃபால்கன்-9 வகை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பால், பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக இஸ்ரோ வசம் ராக்கெட்டுகள் இருக்கும்போது ஏன் ஸ்பேஸ் எக்ஸை நாட வேண்டும்? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு இஸ்ரோ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இஸ்ரோ வசம் பிஎஸ்எல்வி (PSLV), ஜிஎஸ்எல்வி (GSLV) வகை ராக்கெட்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன. என்ஜிஎல்வி (NGLV) ராக்கெட் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் ராக்கெட்கள் மூலம் அதிகபட்சமாக 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை மட்டுமே கொண்டு செல்ல முடியும். ஆனால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஜிசாட்-20 செயற்கைக்கோள் 4 டன்னை விட அதிகம்.
உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்த நகரங்களில் வேகமான தொலைத்தொடர்பு சேவை இருக்கிறது. இந்தியாவிலும் இது இருக்கிறது. ஆனால், கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் இந்த சேவை இல்லை. குறிப்பாக ஜம்மு காஷ்மீரிலும், அந்தமான் & நிக்கோபார் தீவுகளிலும் இந்த சிக்கல் இருக்கிறது. எனவே இதனை சரி செய்ய ஜிசாட்-20 எனும் சக்தி வாய்ந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிநவீனமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கைக்கோள், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இடையூறு இல்லாத, அதிவேக தொலைத்தொடர்பு சேவையை வழங்கும்.
சுருக்கமாக சொல்வதெனில், ஸ்டார் லிங்க், ஒன்வெப் போன்றவைக்கு இது சவால் விடும் வகையில் இருக்கும். இதன் சுமார் 4.7 டன் வரை எடையிருக்கும். எனவேதான் ஃபால்கன்-9 வகை ராக்கெட்டை நாடியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இஸ்ரோ இந்த அளவுக்கு அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸை நாடியதில்லை.
அதற்கு பதிலாக பிரான்ஸின் ஏரியன்ஸ்பேஸ் ராக்கெட்டைதான் இஸ்ரோ நாடி வந்திருந்தது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்கு சொந்தமான இந்த ராக்கெட்டில் இந்தியா இதற்கு முன்னர் 23 ஹெவி வெயிட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏவியிருக்கிறது. சமீபத்தில்தான் ஏரியன்-5 ராக்கெட் ஓய்வு பெற்றது, அதே நேரத்தில் ஏரியன்-6 பயன்பாட்டுக்கு வர தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே வேறு வழியின்றி ஃபால்கன்-9 ராக்கெட்டை நோக்கி சென்றிருப்பதாக இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications