முதல் வெள்ளை கொடியை உயர்த்திய இந்தியா.. டிரம்ப் வரி விதிப்பை சமாளிக்க.. திடீர் சமாதான முடிவு!
நியூயார்க்: கூகுள் வரி என பரவலாக அறியப்படும் கூகுள் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்கள் வழங்கும் ஆன்லைன் விளம்பரச் சேவைகளுக்கு விதிக்கப்பட்ட 6% வரியை நீக்க இந்த முடிவு செய்துள்ளதாம். இந்த வரியை ஏப்ரல் 1 முதல் நீக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரிகளை விதிக்கும் முடிவை கைவிட அல்லது வரியை குறைக்க இந்தியா ஆலோசனை செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சமாதானப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா சமாதானம்
அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இதனால் 4 சதவிகிதம் ஏற்றுமதி சரிந்து உள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த வருடம் மட்டும் சுமார் 7 பில்லியன் டாலர் சரிவு இந்தியாவிற்கு ஏற்படும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை சமாளிக்க இந்தியா பின்வரும் அஸ்திரத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாம் .அமெரிக்காவின் பொருட்களுக்கான வரியை குறைக்க ஆலோசனை செய்து வருகிறதாம்.

ரசாயனங்கள் கொள்முதலை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிகம் மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து கூடுதல் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாம். சோயாபீன், பால், வாகனங்கள், மருத்துவ கருவிகள் மற்றும் விமானங்கள், எலக்ட்ரானிக்ஸ், ஹைடெக் இயந்திரங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவிடமிருந்து அதிகமான பொருட்களை வாங்குவது குறித்து இந்தியா பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியா மீதான வரி
இந்தியா வரியை குறைக்க போவதாக தகவல்கள் வருகின்றன.. அப்படியே இந்தியா வரியை குறைத்தாலும்.. நாங்கள் இந்தியா மீது கண்டிப்பாக வரி விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மீதான கட்டணங்களை இந்தியர்கள் கணிசமாகக் குறைக்கப் போகிறார்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் ஏப்ரல் 2 ஆம் தேதி, அவர்கள் எங்களிடம் இப்போது வசூலிக்கும் அதே கட்டணத்தை நாங்கள் அவர்களிடம் வசூலிப்போம்.. அவர்கள் குறைத்தாலும் குறைக்காவிட்டாலும் நாங்கள் இந்தியாவை விட மாட்டோம்.. அவர்கள் வசூலிக்கும் கட்டணம் அளவிற்கு உயர்த்துவோம் என்று டொனால்ட் டிரம்ப் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம்.
அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் வரி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும் நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க வர்த்தகர்கள் வேறு நாட்டு எஃகு பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச அரசியலில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாங்கள் மற்ற நாடுகளை சமமாக நடத்த விரும்புகிறோம், என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்கள் உயரலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வரி விதிக்கப்படும் நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சீனாவின் பெயர் இடம்பெற்று உள்ளது. வர்த்தக பற்றாக்குறை அடிப்படையில் இந்த வரி விதிப்பை டிரம்ப் மேற்கொண்டுள்ளார். மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்தார்.












Click it and Unblock the Notifications