இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்!
நியூயார்க்: மேற்காசியாவில் நீடித்து வரும் போர் சூழலுக்கு நடுவே, அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு அமைப்பை குறிவைத்து சைபர் தாக்குதல் நடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ (Federal Bureau of Investigation) இயக்குநரின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கில் ஈரான் ஆதரவு ஹேக்கர்கள் ஊடுருவி மின்னஞ்சல்களை வெளியிட்டுள்ளது அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அணு ஆயுத கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தங்களுக்கு முழுமையாக இணங்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த போர் தொடங்கி தற்போது 25 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இந்த நிலையில், மேற்காசியப் பகுதியில் அமெரிக்கா கூடுதல் ராணுவத்தை குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதே நேரத்தில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் 15 அம்சங்களைக் கொண்ட சமாதானத் திட்டத்தை வெளியிட்டார்.
அமெரிக்கா ஈரான் போர்
ஆனால் அந்த முயற்சிகள் தொடர்ந்தும் பலன் அளிக்காத சூழ்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான பதற்றம் குறையவிலை. இந்த பதற்றமான சூழ்நிலையில்தான், எஃப்பிஐ இயக்குநராக உள்ள காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை ஈரான் ஆதரவு ஹேக்கர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மின்னஞ்சல் கணக்கில் இருந்த புகைப்படங்கள் மற்றும் சில ஆவணங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஈரான் ஹேக்கர்
'ஹண்டாலா ஹேக் டீம்' என அழைக்கப்படும் ஹேக்கர் குழுவே இந்த ஊடுருவலை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் நடந்ததை எஃப்பிஐ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதுடன், வெளியிடப்பட்ட தகவல்கள் அனைத்தும் பழையவை என்றும், அரசு ரகசிய தகவல்கள் எதுவும் கசியவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின் படி, 2010 முதல் 2019 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் ஹேக்கர்களால் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எஃப்பிஐ மின்னஞ்சல்
இந்த மின்னஞ்சல்கள் பெரும்பாலும் பழைய தகவல்களாக இருப்பதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய ரகசியங்கள் எதுவும் இதில் இடம்பெறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஹேக்கர் குழு தங்களை பாலஸ்தீன ஆதரவு அமைப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், மேற்கத்திய பாதுகாப்பு நிபுணர்கள் கருத்துப்படி, இந்த குழு உண்மையில் ஈரான் நாட்டின் உளவுத்துறையுடன் தொடர்புடைய பிரிவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சைபர் தாக்குதல்
இதனால், இந்த தாக்குதல் ஒரு தனிப்பட்ட ஹேக்கிங் சம்பவமாக இல்லாமல், அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பின்னணி கொண்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையில், எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேலைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபரின் தலைமை அதிகாரியாக உள்ள சுசி வில்லிஸ் உள்ளிட்டோரின் தனிப்பட்ட தகவல்களையும் வெளியிட உள்ளதாக ஹேக்கர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
போர் சூழ்நிலை
இந்த எச்சரிக்கை அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளுக்குள் கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசியப் பகுதியில் நீடித்து வரும் போர் சூழ்நிலை, ராணுவ நடவடிக்கைகள் மட்டுமின்றி, சைபர் தாக்குதல்கள் மூலமாகவும் தீவிரமடைந்து வருவதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் எஃப்பிஐ அமைப்பின் உயர் அதிகாரி மின்னஞ்சல் கணக்கே குறிவைக்கப்பட்டிருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications