இரவை கிழித்து பறந்த மர்ம பொருள்.. என்ன அது? அமெரிக்க ஆர்மியால் கூட கண்டுபிடிக்க முடியலையாம்!
நியூயார்க்: இரவு வானத்தில் பறந்த மர்ம பொருளை கண்டுபிடிக்க அமெரிக்க போலீஸ் மற்றும் கடற்படை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. எனவே, மர்ம பொருள் குறித்த அச்சம் அதிகரித்திருக்கிறது.
சிலர் இதை ஏலியன்களின் விண்வெளி ஓடமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் கலர் கலராக, சீரியல் பல்பு கட்டி விட்டால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்திருக்கிறது இது. எனவே இந்த மர்ம பொருள் பறக்கும் தட்டாக இருக்காது என்று போலீசார் கூறியுள்ளனர்.

இரவு வானில் பயங்கரம்:
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நியூ ஜெர்சியின் ஓஷன் கவுண்டியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடலோர பகுதியான இங்கு இரவு நேரத்தில் மர்ம பொருட்கள் சில பறந்து சென்றிருக்கின்றன. இதை பார்ப்பதற்கு இரவை கிழத்துக்கொண்டு செல்லும் வெளிச்சத்தை போல இருந்திருக்கிறது. உடனடியாக உஷாரான இந்த பகுதியின் காவல்துறை அதிகாரி, சக போலீசுக்கும், கடற்படைக்கும், FBI அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். வானில் ஏதோ பறக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தினந்தோறும் போன்கால் வருவது இயல்புதான்.
மிரண்டு போன போலீஸ்:
ஆனால் போலீஸ் அதிகாரியே போன் செய்யும்போது, அதை தட்டி கழித்துவிட முடியாது. எனவே, கடற்படை தரப்பில் கண்காணிப்பு ட்ரோன்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. சுமார் 50 ட்ரோன்கள் மர்ம பொருட்கள் பறந்த திசையை நோக்கி பறந்திருக்கிறது. ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அமெரிக்க கடற்படையிடம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ட்ரோன்கள் இருக்கின்றன. ஆனால் இதை பயன்படுத்தி கூட மர்ம பொருளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மிகுந்த ஆச்சரியமாக இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

சக்தி வாய்ந்த ட்ரோன்கள்:
அமெரிக்க ராணுவத்திடம் உள்ள ட்ரோன்கள் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் சுமார் 24 மணி நேரம் வரையும், அதிகபட்சமாக 48 மணி நேரம் வரையும் இடைநில்லாமல் பறக்கும் திறன் கொண்டவையாகும். அப்படி இருக்கையில் ஏன் மர்ம பொருளை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. வானில் பறக்கும் அனைத்து பொருட்களையும் பின்தொடர, அதன் வெப்பநிலை மிக முக்கியமானது. ஒரு விமானம் பறக்கிறது எனில் அதிலிருந்து வரும் வெப்பம் ஒரு சிக்னல் போல, தங்களை பின்தொடர்பவர்களுக்கு காட்டி கொடுத்துவிடும்.
ஆனால் வானத்தில் பறந்த மர்ம பொருட்களிலிருந்து வெப்பம் ஏதும் வெளியாகவில்லை என்பது ஆச்சரியமானதாக இருக்கிறது. அப்படியெனில் பறந்தது என்ன?
ஏலியன்கள் என அச்சப்படும் மக்கள்:
கடந்த சில நாட்களாக அமெரிக்க வான்வெளியில் மர்ம பொருட்களின் நடமாட்டம் ஓவராக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இப்படி இருக்கையில் இப்போது வந்தது ஏலியன்களாக இருக்கலாம் என்று மக்கள் சந்தேகித்துள்ளனர். இதுவரை ஏலியன்களை எதையும் நாம் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஏலியன்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என ஆய்வாளர்கள் பலரும் கூறி வருகின்றனர். சுமார் 5,500 கி.மீ நீளம் கொண்ட வட அட்லாண்டிக் கடலில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.
ஒருவேளை ஆய்வாளர்கள் சொல்வதை போல இந்த பகுதியில் ஏலியன்கள் மறைந்து இருக்கலாமோ என்று சந்தேகம் எழுகிறது. ஏனெனில் இந்த பகுதியை துல்லியமாக கண்காணிக்கும் அளவுக்கு நம்மிடம் போதுமான நவீன தொழில்நுட்பங்கள் கிடையாது. எனவேதான் மக்களின் சந்தேகம் இன்னும் வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications