வருஷத்துல 2வது நாளே இப்படியா நடக்கனும்! நாசா கொடுத்த அலர்ட்.. பூமிக்கு ஆபத்து
நியூயார்க்: இன்று பூமியை மிக நெருக்கமாக இரண்டு பெரிய விண்கற்கள் கடக்க இருக்கின்றன. இதன் பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் கூட அது பூமியில் பேரழிவை ஏற்படுத்திவிடும் என்று நாசா எச்சரித்துள்ளது.
நாசா எச்சரிக்கை: நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் பூமிக்கு நெருக்கமாக செல்லும் விண்கற்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த வகையில் இன்று 2 விண்கற்கள் பூமிக்கு நெருக்கமாக செல்கின்றன. முதல் விண்கல் '2024 YF7' என்கிற பெயரில் குறிப்பிடப்படுகிறது. பயணிகள் விமானத்தின் சைஸ் கொண்ட, அதாவது சுமார் 78 அடி விட்டம் கொண்ட இந்த விண்கல் சுமார் 48,870 கி.மீ வேகத்தில், பூமியை 33 லட்சம் கி.மீ தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது.

இரண்டாவது விண்கல்: '2024 YR9' என பெயரிடப்பட்ட இந்த 2வது விண்கல், 76 அடி விட்டம் கொண்டதாக இருக்கிறது. இது சுமார் 74,573 கி.மீ வேகத்தில், பூமியை 33.4 லட்சம் கி.மீ தொலைவில் கடக்க இருக்கிறது. 33 லட்சம் கி.மீ என்பது நீண்ட தூரம் போல தெரியலாம். ஆனால் இது பூமிக்கு ரொம்ப பக்கமான தூரமாகும். ஒப்பீட்டுக்கு சொல்ல வேண்டும் எனில், பூமிக்கு பக்கத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் தூரம் 2 கோடி கி.மீ அப்படியெனில் 33 லட்சம் கி.மீ என்பது ரொம்ப பக்கம்தானே?
பாதிப்புகள்: இந்த விண்கற்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று போய்விட்டால் பரவாயில்லை. ஆனால் பூமி மீது மோதினால் மிகப்பெரிய அளவுக்கு பேரழிவு ஏற்படும். அதாவது இதில் ஒரு கல் விழுந்தாலே அந்த இடத்தில் பல நூறு கிலோ வெடி பொருட்கள் வெடித்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமோ? அந்த அளவுக்கு சேதம் ஏற்படும். கல் விழுந்த இடத்தில் அரை கிலோ மீட்டர் ஆழத்திற்கு, 2 கி.மீ விட்டத்திற்கு பெரிய பள்ளம் உருவாகும்.
நிலநடுக்கம்: கல் விழுந்ததால் ஏற்படும் அதிர்வலைகள் சுமார் 50 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்தையும் தவிடு பொடியாக்கிவிடும். மட்டுமல்லாது இந்த பகுதிகளில் ரிக்டர் அளவில் 7 புள்ளியில் நிலநடுக்கம் ஏற்படும். ஒருவேளை கல் தண்ணீரில் விழுந்தால் அது விழுந்த இடத்திலிருந்து சுமார் 1000 கி.மீ பரப்பளவில் சுனாமி ஏற்படும். மட்டுமல்லாது காட்டு தீயையும், எரிமலை வெடிப்பையும் கூட இது ஏற்படுத்தும். எனவே லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள்.
காட்டு தீ மற்றும் எரிமலை வெடிப்பால் ஏற்படும் புகை, வளிமண்டலத்தை அப்படியே முழுமையாக மூடிவிடும். இதனால் சூரிய வெளிச்சமே உள்ளே வராது. எனவே பூமி தனது இயல்பான வெப்பநிலையை இழக்க நேரிடும். எங்கு பார்த்தாலும் குளிரும், உறை பனியும்தான் இருக்கும். இது தாவரங்களை அழித்துவிடும். இதனால் தாவர உண்ணிகள் மெல்ல உயிரிழக்கும். பின்னர் அதை சார்ந்து வாழும் மிருகங்களும் உயிரிழக்கும். இதனால் உணவு சங்கிலியின் உச்சத்தில் உள்ள மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஆனால் நல்வாய்ப்பாக இன்று இந்த விண்கற்கள் பூமி மீது மோதுவதற்கான வாய்ப்பு இல்லை என்று நாசா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications