H-1B விசா மட்டுமல்ல.. அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கும் செக்.. அதிர்ச்சி தரும் திட்டம்! போச்சு
நியூயார்க்: அமெரிக்க செனட்டர் சக் கிராஸ்லி, வெளிநாட்டு மாணவர்களுக்கான பணி அங்கீகாரங்களை நிறுத்துமாறு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை (DHS) வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, அமெரிக்கர்களுக்கு எதிரான போட்டியை உருவாக்குகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
செனட்டர் கிராஸ்லி வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கர்களுக்கு எதிராகப் போட்டியிடும் மாணவர் விசாதாரர்களுக்கு பணி அங்கீகாரங்களை DHS நிறுத்துவது அவசியம். இது சட்டத்தை நேரடியாக மீறுவதோடு, தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்காவை பாதிக்கும். இது அமெரிக்காவிற்கு ஆபத்தை விளைவிக்கும். வெளிநாட்டு மாணவர் விசாதாரர்களுக்கான பணி அங்கீகாரங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு DHS செயலாளருக்கு நான் கடிதம் அனுப்பியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

அமெரிக்க விசாவிற்கு சிக்கல்
இந்த உத்தரவு அமலுக்கு வந்தால், 'ஆப்டோனல் பிராக்டிகல் டிரெய்னிங்' (OPT) திட்டமும் இதன் கீழ் வரக்கூடும். இந்தப் பயிற்சித் திட்டம், சர்வதேச மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு 12 முதல் 36 மாதங்கள் வரை அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கிறது. குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளைத் தேடும் மாணவர்களுக்கு OPT ஒரு முக்கியப் பாதையாகக் கருதப்படுகிறது.
தற்போதைய விதிகளின்படி, F-1 விசாக்களில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் முதல் கல்வி ஆண்டில் வளாகத்திற்கு வெளியே வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், அவர்கள் OPT அல்லது கரிகுலர் பிராக்டிகல் டிரெய்னிங் (CPT) மூலம் பணி அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கலாம். OPT 12 மாதங்கள் வரை பணி அங்கீகாரத்தை வழங்குகிறது. STEM பட்டதாரிகளுக்கு மேலும் 24 மாத நீட்டிப்பும் உண்டு.
கரிகுலர் பிராக்டிகல் டிரெய்னிங் (CPT) என்பது, பாடத்திட்டத்துடன் தொடர்புடைய இன்டர்ன்ஷிப்கள் அல்லது நடைமுறைப் பயிற்சிகளை அனுமதிக்கிறது. கரிகுலர் பிராக்டிகல் டிரெய்னிங் (CPT) விண்ணப்பங்களுக்கு மாணவர்களின் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதல் தேவை.
H-1B விசா திட்டம்
சக் கிராஸ்லியின் இந்தக் கருத்து, H-1B விசா திட்டத்தில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த பெரிய மாற்றங்களுக்குப் பிறகு வந்துள்ளது. செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் வகையில், புதிய H-1B மனுக்களுக்கான கட்டணம் $100,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இத்தகைய மனுக்களுக்கான கட்டணம் $2,000 முதல் $5,000 வரை இருந்தது. அதிபர் டிரம்பின் H-1B விசா திட்ட சீர்திருத்தம், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களையும், திறமையான நிபுணர்களையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 செப்டம்பர் 19 அன்று, அமெரிக்க நிர்வாகம் எச்-1பி விசா கட்டணத்தை ஆண்டுக்கு $100,000 ஆக உயர்த்துவதாக அறிவித்தது. எச்-1பி திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து நூறாயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. தற்போது இதற்கு டிரம்ப் செக் வைத்துள்ளார்.
எச்-1பி விசா
எச்-1பி விசா மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இதை ஒருமுறை புதுப்பித்து மொத்தம் ஆறு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். விண்ணப்பதாரர்கள் அமெரிக்க முதலாளியால் ஸ்பான்சர் செய்யப்பட வேண்டும்.
இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 65,000 விசாக்கள் என்ற உச்சவரம்பு உள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இருந்து மேம்பட்ட பட்டம் பெற்றவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் ஒதுக்கப்படுகின்றன. அதிக தேவை காரணமாக, விசாக்கள் பொதுவாக லாட்டரி முறை மூலம் ஒதுக்கப்படுகின்றன.
எச்-1பி விசா பெறுபவர்கள் யார்?
எச்-1பி திட்டம் முக்கியமாகத் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் பிற சிறப்புத் துறைகளில் பணிபுரியும் உயர் திறன்கொண்ட வெளிநாட்டு நிபுணர்களுக்குப் பயனளிக்கிறது.
2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட எச்-1பி விண்ணப்பங்களில் 70% க்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன. சீனர்கள் இரண்டாவது பெரிய குழுவாக உள்ளனர். இவர்கள் சுமார் 11% விசாக்களை பெற்றுள்ளனர்.
2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை, சுமார் 400,000 எச்-1பி விசாக்களில் 72% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்.சி.எல், விப்ரோ உள்ளிட்ட முன்னணி இந்திய ஐ.டி நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் சுமார் 20,000 ஊழியர்களுக்கு விசா வழங்கி உள்ளது. இப்போது புதிய விதியால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.












Click it and Unblock the Notifications