“நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவிடுவேன்”! நியூயார்க் மேயர் வேட்பாளர் பேச்சால் சலசலப்பு!
நியூயார்க்: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க்குக்குள் நுழைந்தால் அவரை கைது செய்ய உத்தரவிடுவேன் என்று, நியூயார்க் நகரத்தின் மேயர் வேட்பாளரான ஸோஹ்ரான் மாம்தானி கூறியிருக்கிறார்.
பாலஸ்தீனத்தின் மீது போரை தொடங்கியிருக்கும் இஸ்ரேல், இதுவரை அப்பாவி மக்கள் 64,000 பேரை கொலை செய்திருக்கிறது. இந்த போருக்கு எதிராக சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இருப்பினும் இஸ்ரேல் போரை நிறுத்தவில்லை. அதற்கு மாறாக, இனி பாலஸ்தீனம் என்று ஒரு நாடு இருக்காது, அது விரைவில் இஸ்ரேலின் ஒரு பகுதியாக மாறும் என்று நெதன்யாகு கூறியிருந்தார்.

போர் காணரமாக, சர்வதேச நீதிமன்றம் நெதன்யாகுவுக்கு எதிரான கைது வாரண்ட்டை பிறப்பித்திருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்குள் நெதன்யாகு நுழையும் பட்சத்தில் அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே நெதன்யாகு, எந்தெந்த நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றன? என்பதை பார்த்து, தவிர்த்து சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
தற்போது அமெரிக்கா வந்திருக்கும் நெதன்யாகு, டிரம்ப் உடன் சில முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதித்து வருகிறார். இந்நிலையில்தான், நான் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நெதன்யாகு நியூயார்க்குக்குள் நுழைந்தால் அவரை கைது செய்ய உத்தரவிடுவேன் என்று மாம்தானி கூறியிருக்கிறார்.
மாம்தானியின் இந்த பேச்சு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. பைடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்த மாம்தானி, தன்னை ஒரு இடதுசாரியாளராக அடையாளப்படுத்திக்கொள்கிறார். இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டையும், டிரம்பின் நிலைப்பாட்டையும் மாம்தானி கடுமையாக விமர்சித்து வருகிறார். இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் உடனடியாக துண்டித்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்.
"நெதன்யாகு விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அவரைக் கைது செய்ய உத்தரவிடுவேன். இது நான் நிறைவேற்ற விரும்பும் ஒன்று. சர்வதேச சட்டங்களை நிலைநிறுத்தும் நகரமாக நியூயார்க் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பம். தலைமைத்துவத்திற்காக அரசை நம்பியிருக்க முடியாத தருணம் இது. நமது சொந்த மதிப்புகளுக்காகவும், மக்களுக்காகவும் துணை நிற்பது எப்படி என்பதை நகரங்களும் மாநிலங்களும் இந்த நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும்" என்று மாம்தானி கூறியிருக்கிறார்.
நெதன்யாகு மட்டுமல்லாது, உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்ய பிரதமர் புதினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட்டை பிறப்பித்திருந்ததை மேற்கோள் காட்டி பேசிய மாம்தானி, புதின் நியூயார்க் வந்தாலும் அவரை கைது செய்வேன் என்றும் கூறியிருக்கிறார். இவரது பேச்சு அமெரிக்கா மட்டுமல்லாது சர்வதேச அளவில் விவாதங்களை தூண்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications