அமெரிக்கா அதிரடி.. பஹல்காமை தாக்கிய ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்’டுக்கு செக்.. செம மேட்டர்
நியூயார்க்: கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 அப்பாவிகளை கொன்றனர். இந்நிலையில் தான் ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' அமைப்பை பயங்கரவாத பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி திடீரென்று பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ஆண்களை மட்டும் மதத்தை கேட்டு கேட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' (ஆர்பிஃஎப்) பொறுப்பேற்றது.
இந்நிலையில் தான் டிஆர்எஃப் எனும் ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' அமைப்பின் மீது அமெரிக்கா அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று முதல் முறையாக அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதனை வகைப்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிக்கையில், ‛‛இன்று வெளியுறவுத்துறை நடத்தி ஆலோசனைக்கு பிறகு ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்பு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலகளாவிய பயங்கரவாத அமைப்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத் துறையால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள், நமது தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்கும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கோரும் அதிபர் டிரம்பின் அழைப்பை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான டிரம்ப் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை இது நிரூபிக்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு ‛காஷ்மீர் ரெசிஸ்டன்ட்' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ‛தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட்' அமைப்பு முதலில் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தீவிரமாக தயாராவதை அறிந்ததும் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று பின்வாங்கியது. ஆனால் உண்மையில் அந்த அமைப்பு தான் தாக்குதலை திட்டமிட்டு நடத்தி இருப்பதாக நம் நாடு நம்புகிறது.
மேலும் இந்த அமைப்பின் தாய் அமைப்பான லஷ்கர் இ தொய்பா ஏற்கனவே அமெரிக்காவால் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதன் துணை அமைப்பான ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' அமைப்பையும் அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தி உள்ளது. இதன்மூலம் இனி அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருக்கும்போது உடனடியாக அமெரிக்காவால் கைது செய்ய முடியும். அதேபோல் நாடு கடத்தும் நடவடிக்கையை எளிதாக மேற்கொள்ள முடியும்.
முன்னதாக பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. அதில் மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டது. நம் நாடு அடித்த அடியில் பாகிஸ்தான் நம்மிடம் தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சியது. அதன்பிறகு தான் இருநாடுகள் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications