விண்வெளியில் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. களமிறங்கும் ஸ்பேஸ் எக்ஸ்! காப்பாற்றுவாரா எலான் மஸ்க்?
நியூயார்க்: சுனிதா வில்லயம்ஸை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்து சென்ற போயிங் நிறுவனத்தின் 'ஸ்டார் லைனர்', தற்போது பழுதடைந்துள்ளதால் சுனிதா பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ்-ன் 'க்ரூ டிராகன்' விண்கலம் அழைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க விண்வெளி துறையில் சமீபத்தில் தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. அதன்படி தனியார் நிறுவனங்கள் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. முதலில் எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் களமிறங்கி நாசா வீரர்களை விண்வெளிக்கு கொண்டு சென்றது. இதனையடுத்து பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் களமிறங்கியது.

போயிங் சார்பில் 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப் தயாரிக்கப்பட்டது. இது கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி புறப்பட்டது. இதில் 58 வயதான சுனிதா வில்லியம்ஸூம், அவருடன் சக விண்வெளி வீரராக புட்ச் வில்மோரும் பயணித்தனர். இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ம் தேதியன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இது சுனிதா வில்லியம்ஸுக்கு மூன்றாவது பயணமாகும்.
ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை ஸ்டார் லைனரின் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் கடந்த 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி தள்ளி போட்டது. இதன்படி ஜூன் 26ம் தேதி அதாவது நேற்று இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்றும் இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இது நாசா விஞ்ஞானிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஜூலை 2ம் தேதி அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு இரண்டு வீரர்களும் பூமிக்கு பத்திரமாக அழைத்துவரப்படுவார்கள் என போயிங் தெரிவித்திருக்கிறது.
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு லீக்கேஜ் மற்றும் ஹீலியம் வாயு கசிவு ஆகிவை இல்லாமல் இருக்க வேண்டும்.
ஒருவேளை இந்த பிரச்னைகள் சரி செய்யப்படாவிட்டால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்காக எலான் மஸ்க், 'க்ரூ டிராகன்' எனும் ஸ்பேஸ் ஷிப்பை தயாராக வைத்திருக்கிறார். விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை கொண்டு சேர்க்கவே பிரத்யேகமாக இந்த க்ரூ டிராகனை ஸ்பேஸ் எக்ஸ் வடிவமைத்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம், க்ரூ டிராகன் 4 வீரர்களை இப்படி பத்திரமாக விண்வெளி மையத்திற்கு கொண்டு சென்று, திரும்பவும் பூமிக்கு அழைத்து வந்திருக்கிறது.
பூமியிலிருந்து பால்கன் 9 எனும் ராக்கெட் மூலம் க்ரூ டிராகன் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும். வழக்கமாக ராக்கெட்டில் மட்டுமே த்ரஸ்டர்கள் எனப்படும் உந்து விசை கருவி இருக்கும். ஆனால், க்ரூ டிராகனில், 4 த்ரஸ்டர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒருவேளை பால்கன் ராக்கெட் செயலிழந்துவிட்டால், க்ரூ டிராகன் மட்டும் தனியாக கழன்று பாதுகாப்பாக தரையிறங்கிவிடும்.
எனவே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை காப்பாற்ற, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த க்ரூ டிராகன் சரியான தேர்வாக இருக்கும் என்று நாசா வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகின்றன. ஆனால், போயிங் நிறுவனம் இந்த மிஷனில் ஏறத்தாழ 7 பில்லன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கிறது. எனவே எப்படியாவது ஸ்டார் லைனரில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யவே முயற்சிக்கும் என்றும் விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications