அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்களுக்கு வாய்ப்பு.. 'கோல்டு கார்டு' குறித்து டிரம்ப் விளக்கம்!
நியூயார்க்: அமெரிக்காவின் குடியுரிமை திட்டத்தில், கோல்டு கார்டு எனும் மாற்றத்தை டிரம்ப் கொண்டு வந்திருக்கிறார். இதன் மூலம் இந்தியர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமர்த்த முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே இருந்த குடியுரிமை திட்டம் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், ஆனால் டிரம்ப் கொண்டு வந்திருப்பது தேவையில்லாது என்றும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், டிரம்பின் பேச்சு கவனம் பெற்றிருக்கிறது.

இது குறித்து சிஎன்என் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்த டிரம்ப், "அமெரிக்காவில் ஏற்கெனவே அமலில் இருக்கும் இபி-5 எனும் குடியுரிமை திட்டம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிக அளவில் ஈர்க்கவில்லை. உதாரணமாக சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இங்கிருக்கும் உயர் கல்வி நிறுவனங்களான ஹாவர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் பயில வரும் மாணவர்கள், அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அவர்கள் படிக்கிறார்கள், பட்டம் பெறுகிறார்கள், ஆனால் தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று வணிகம் செய்கிறார்கள். அங்கு அவர்களுடைய வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. அவர்களால் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிகிறது. இதே அவர்கள் இங்கே இருந்தால் அமெரிக்காவுக்குதானே லாபம்? எனவே, இபி-5 குடியுரிமை திட்டத்திற்கு பதில், கோல்டு கார்டு எனும் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
5 மில்லியன் டாலர் (ரூ.43.59 கோடி) கொடுத்து இந்த அட்டையை வாங்கிக்கொள்ள முடியும். எனவே பணக்காரர்கள் அமெரிக்காவுக்கு வருவார்கள். அவர்கள் முதலீடு செய்வார்கள் அதன் மூலம் இங்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மட்டுமல்லாது இங்கே படித்தவர்களுக்கு இங்கேயே வேலை கிடைக்கும். குறிப்பாக அமெரிக்காவின் நிறுவனங்கள் இந்த அட்டையை வாங்குவதன் மூலம், இங்குள்ள கல்வி நிறுவனங்களில் படித்து பட்டம் பெற்ற இந்தியர்களை இங்கேயே பணியமர்த்த முடியும்" என்று கூறியுள்ளார்.
மேலோட்டமாக பார்த்தால் இது நல்ல யோசனையாகத்தான் தோன்றும். ஆனால், இதில் பல பிரச்சனைகள் இருப்பதாக இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் கூறுகின்றனர்.
அதாவது இதற்கு முன்னர் அமெரிக்காவுக்கு செல்ல இந்திய முதலீட்டாளர்கள், ரூ.9.15 கோடி பணத்தை முதலீடு செய்திருந்தனர். இதுவே அமெரிக்காவின் பின்தங்கிய பகுதி எனில் ரூ.7 கோடி முதலீடு செய்தால் போதுமானது. ஆனால் இப்போது கோல்டு கார்டு என்று சொல்லி ரூ.43.59 கோடியை முதலீடு செய்ய சொல்கிறாரே எப்படி செய்வது? என்று இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இபி-5 குடியுரிமை திட்டத்தில் குறைந்த முதலீடு இருந்தபோதே அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை கொஞ்சமாகத்தான் இருந்தது. இப்போது, அதிக முதலீடு நிர்ணயித்திருப்பதால் இந்தியர்களின் அமெரிக்க கனவு முற்றிலுமாக சிதைந்துவிடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு பிரச்சனையை இருக்கும்போது, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களை பணியமர்த்தலாம் என்று டிரம்ப் பேசியிருப்பது வெறும் கண்துடைப்புதான் என்றும் குமுறுகின்றனர்.
டிரம்ப் பேசியது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?












Click it and Unblock the Notifications