வாழ்க்கை ஒரு வரம்.. கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தலைவரின் கடைசிக் கடிதம் சொல்லும் பாடம்!
கொரோனாவால் உயிரிழந்த அமெரிக்க இளைஞர் ஒருவரின் கடைசிக் கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த இளைஞர் ஒருவர், தான் இறப்பதற்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எழுதிய இதயத்தை உருக்கும் கடிதம் வெளியாகி பலரையும் கண்ணீர் கடலில் தத்தளிக்க செய்துள்ளது.
கொரோனா எனும் கொடிய ராட்சசனால் உலகமே இன்று பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அப்படியாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இளைஞர் ஒருவர், மரணப்படுக்கையில் தன் குடும்பத்திற்காக எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அமெரிக்க இளைஞர்
அமெரிக்காவின் கனக்டிகட் பகுதியை சேர்ந்தவர் ஜொனாதன். 32 வயதாகும் ஜொனாதனுக்கு, கேட் எனும் மனைவியும், பிரேடன் எனும் 2 வயது மகனும், பெனிலோப் எனும் 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு
ஜொனாதன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த 22ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடமைகள் மனைவி கேட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.

உருக்கமான கடிதம்
கணவரின் செல்போனை கேட் திறந்து பார்த்தார். அப்போது தான் இறப்பதற்கு முன்னர் ஜொனாதன் எழுதிய கடைசி கடிதம் கேட்டின் கண்ணில் பட்டது. அதில் மனைவி மற்றும் குழந்தைகளை பற்றி ஜொனாதன் எழுதியுள்ளார்.

சிறந்த வாழ்க்கை
"நான் உங்களை மனதார நேசிக்கிறேன். நான் நினைத்துக்கூட பார்த்திராத சிறந்த வாழ்வை நீ எனக்கு கொடுத்திருக்கிறாய். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. உனது கணவராகவும், பிரேடன் மற்றும் பெனிலோப்பின் அப்பாவாகவும் பெருமை கொள்கிறேன்.

நல்ல தாய்
நான் இதுவரை பார்த்ததிலேயே மிக சிறந்த, அழகான, அக்கறையான பெண் நீ தான் கேட். உண்மையில் உனக்கு நிகர் நீ தான். என்னை உன் மீது காதலில் விழ வைத்த அதே வேட்கையுடன் நீ சந்தோஷமாக வாழ வேண்டும். நம் குழந்தைகளுக்கு நீ ஒரு சிறந்த தாயாக இருக்கிறாய் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்.

நண்பன்
பிரேடன் தான் எனது மிகச் சிறந்த நண்பன். அவனது தந்தையாக நான் பெருமைகொள்கிறேன். அவன் எனக்கு அத்தனை சந்தோஷங்களை கொடுத்திருக்கிறான். அவன் அதை தொடர வேண்டும். இதை நீ அவனுக்கு தெரியப்படுத்து.

நான் ஒரு அதிர்ஷ்டசாலி
பெணிலோப் தான் என் இளவரசி. வாழ்க்கையில் அவள் விரும்பும் அனைத்தும் அவளுக்கு கிடைக்க வேண்டும். நான் ஒரு அதிர்ஷ்டசாலி. இதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உருக்கமான கடிதம்
வாழ்க்கையில் பின்நோக்கி செல்ல வேண்டாம். நம் குழந்தைகளையும், உன்னையும் நேசிக்கும் யாரையாவது நீ சந்திக்கலாம். அதற்காக உன்னை நேசிப்பேன். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சந்தோஷமாக இருங்கள்", என ஜொனாதன் தனது கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.

கடிதம் சொல்லும் பாடம்
ஜொனாதனின் இந்த வரிகள் படிப்பவர் மனதை உலுக்கும் வகையில் இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் இல்லாத மனிதர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் எத்தனை எத்தனையோ கனவுகளுடன் வாழ்க்கை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்தக் கனவுகள் அஜாக்கிரதையால் தவிடு பொடியாகிவிடக் கூடாது என்பதைத் தான் ஜொனாதனின் இந்தக் கடிதம் நமக்கு உணர்த்துகிறது.
Recommended Video

வாழ்க்கையின் அர்த்தம்
இந்த ஊரடங்கு நேரத்திலும்கூட அரசின் உத்தரவை மதிக்காமல், வெளியில் சுற்றும் எத்தனையோ பேரை நாம் பார்க்கிறோம். கொரோனாவின் கோரமுகத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததையே இது காட்டுகிறது. ஒரு நிமிடம் நல்ல வாழ்க்கைக் கிடைத்தும் வாழ விடாமல் கொரோனா அரக்கனிடம் உயிரைப் பறி கொடுத்த ஜொனாதனின் இடத்தில் உங்களை நிறுத்திப் பாருங்கள். அப்போது வாழ்க்கையின் அர்த்தம், மகிமை உங்களுக்குப் புரியும்.












Click it and Unblock the Notifications