ஆஹா.. இது லிஸ்ட்லயே இல்லையே.. அமெரிக்காவில் அரசு நிர்வாக முடக்கத்தை வைத்து டிரம்ப் போட்ட திட்டம்
நியூயார்க்: அமெரிக்காவில் செலவின மசோதாவில் மலிவு விலை பராமரிப்பு சட்டத்தின் கீழ் வரும் சுகாதார காப்பீடு பிரிமியங்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும் என ஜனநாயக கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை ஏற்க ஆளும் கட்சியான குடியரசு கட்சியும், அதிபர் டிரம்பும் ஏற்கவில்லை.. எனவே அரசு நிர்வாகம் இரண்டு நாட்களை கடந்து முடங்கி உள்ளது. இதனால் சுமார் 7½ லட்சம் அரசு ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலிலும் டிரம்ப் போட்ட திட்டம், ஜனநாயக கட்சினரை கொதிப்பில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்காவில் அரசு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு செலவின மசோதா தாக்கல் செய்யப்படும். அந்தவகையில் குறுகிய கால செலவின மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றால் ஆளும் கட்சி 60 சதவீதம் மெஜாரிட்டி செனட் சபையில் பெற்றிருக்க வேண்டும்.

60 சதவீத மெஜாரிட்டி
ஆனால் ஆளும் குடியரசு கட்சி கட்சிக்கு அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இடங்களை பெற்றிருந்தாலும் செலவின மசோதா நிறைவேறுவதற்கு தேவையான 60 சதவீத வாக்குகளுக்கான மெஜாரிட்டி செனட் சபையில் இல்லை. அங்கு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றால், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் ஆதரவை அந்த கட்சி பெற்றாக வேண்டும். வழக்கமாக ஜனநாயக கட்சி தங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் தான் ஆதரிக்கும்.
ஜனநாயக கட்சி எதிர்ப்பு
அந்த வகையில் செலவின மசோதாவில் மலிவு விலை பராமரிப்பு சட்டத்தின் கீழ் வரும் சுகாதார காப்பீடு பிரிமியங்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும் என ஜனநாயக கட்சியினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஆளும் கட்சியான குடியரசு கட்சி மறுத்துவிட்டது. இதனால் மேற்படி செலவின மசோதாவுக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா முடக்கம்
செலவின மசோதா நிறைவேற்ற முடியாததால் அமெரிக்காவின் அரசு துறைகளுக்கான நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அரசு துறைகள் அனைத்தும் முடங்கி இருக்கிறது. கடந்த 1-ந்தேதி அதிகாலை 12.01 முதல் ஏற்பட்டு இருக்கும் இந்த முட்டுக்கட்டை இரண்டு நாட்களை கடந்து நீடித்து வருகிறது.
7½ லட்சம் அரசு ஊழியர்களுக்கு பாதிப்பு
செலவின மசோதான பிரச்சனை காரணமாக அமெரிக்காவின் ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, விமான சேவை, அறிவியல் ஆய்வு, வங்கிகள் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும். ஆனால் அந்த ஊழியர்களுக்காக ஊதியம் நிறுத்தி வைக்கப்படும். அதேநேரம் தேசிய பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பார்வையாளர் மையங்கள் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் போன்ற அத்தியாவசியமற்ற துறைகள் அனைத்தும் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில்அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்த துறைகளில் பணியாற்றி வரும் சுமார் 7½ லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளனர். இவர்கள் பணி இழக்கும் அபாயத்தில்இருக்கிறார்கள். இந்த முடக்கத்தால் அமெரிக்க அரசுக்கு ஒவ்வொரு நாளும் 400 மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறதாம். அதேபோல் உள் கட்டமைப்பு திட்டங்களும் முழுமையாக முடங்கி உள்ளன.
அமெரிக்காவில் விலைவாசி உயர்வு
அமெரிக்காவில் டிரம்பின் அரசு நிர்வாகம் தீவிரமாக முடங்கி இருப்பதால் நாடு முழுவதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த முடக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் செலவின மசோதா விவகாரத்தில் ஆளும் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன. இதனால் செலவினா உடனடியாக நிறைவேறும் நிலை இல்லை. இதனால் டிரம்ப் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த போகிறார். டிரம்ப் தான் இந்த முடக்கத்திற்கு காரணம் என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி விமர்சித்து வருகிறது.
டிரம்ப் போட்ட திட்டம்
அதேநேரம் அமெரிக்க பணியாளர் தொகுப்பை மறுவரையறை செய்யவும், எதிர்ப்பாளர்களை தண்டிக்கவும் இந்த அரசு நிர்வாக முடக்கத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த டிரம்ப் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜனநாயக கட்சியினர் கொதித்து போயிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications