அமெரிக்காவின் டாப் சீக்ரெட்.. தவறுதலாக கசியவிட்ட அதிகாரிகள்! டிரம்புக்கு வந்த புது தலைவலி
நியூயார்க்: ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா கடந்த 15 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பான தகவல் முன்கூட்டியே கசிந்ததாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. உயர் அதிகாரிகள் இருக்கும் சிக்னல் மெசேஜிங் குழுவில் இந்த தகவல் பகிரப்பட்டதாக அட்லாண்டிக் பத்திரிகையாளர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
மத்திய கிழக்கில் உள்ள ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் உள்ளது. இவர்கள் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேலிய ஆதரவு நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செங்கடலில் செல்லும் ராணுவம் மற்றும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியது.

போர் ரகசியங்கள் கசிந்தது
இதனையடுத்து, அப்போதிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஏமன் மீது அமெரிக்கா மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுத்தது. ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. தொடர்ந்து ஏமன் மீது மேலும் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு இருக்கும் நிலையில், அமெரிக்காவின் முக்கியமான போர் ரகசியங்கள் கசிந்து இருப்பது அந்நாட்டுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கடந்த 15 ஆம் தேதி தாக்குதல் தொடர்பான தகவல் 2 மணி நேரத்திற்கு முன்பே கசிந்து இருக்கிறது. டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள உயர் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தவறுதலாக போர் ரகசிய திட்டங்களை சிக்னல் மெசேஜிங் செயலி ஒன்றில் பகிர்ந்துவிட்டார்களாம். அமெரிக்க உயர் அதிகாரிகளான பாதுகாப்பு செயலர் உள்ளிட்டவர்கள் இருக்கும் அந்த செயலியில் அட்லாண்டிக் மேகசின் என்ற வார இதழின் செய்தி ஆசிரியரும் இருந்துள்ளார்.
இதனால், அமெரிக்காவின் இந்த ரகசியங்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அட்லாண்டிக் ஜெஃப்ரி கோல்ட்டு பெர்க் கூறுகையில், "ஆயுதங்கள் தொகுப்பு, எங்கு தாக்குதல் நடத்த வேண்டும் என்ற இலக்குகள், நேரம் என அனைத்து முக்கியமான தகவல்களும் ஏமனில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய கடந்த 15 ஆம் தேதி அன்று இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக பகிரப்பட்டுள்ளது.
2 மணி நேரத்திற்கு முன்பே எனக்கு தெரியும்
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே எனக்கு தெரியும். அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலர் பீடே ஹெக்ஸெத், போர் திட்டம் தொடர்பாக காலை 11.44 மணிக்கு மெசேஜ் செய்தார்" என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவில் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் பிரைன் ஹூக்ஸ், தவறுதலாக இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
அமெரிக்க உயர் அதிகாரிகள் இருக்கும் குரூப் சாட் குழுவில், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ருபியோ, சிஐஏ இயக்குநர் ஜான் ரட்ச்லிப்பே, உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டு, வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சுசி வைல்ச் ஆகியோர் இடம் பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் இருக்கும் இந்த குழுவில் எப்படி தவறுதலாக தொடர்பு இல்லாத ஒரு எண் இணைக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டொனால்டு டிரம்ப் ரியாக்ஷன்
இதற்கிடையே, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மீறல் என்றும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஜனநாயக கட்சி எம்பிக்கள் கூறினர். இது டிரம்ப் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்பிடம், "இவ்விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. அட்லாண்டிக்கை நான் படிப்பது இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications