கிளைமேக்ஸை நெருங்கிய அதிபர் தேர்தல்.. எங்களின் குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது.. பிடன் அதிரடி பேச்சு
நியூயார்க்: எங்களின் குரலை ஒடுக்க முடியாது, எல்லா தபால் வாக்குகளையும் எண்ண வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் பிடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கிட்டதட்ட கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது. நெவாடா அல்லது பென்சில்வேனியாவில் வெற்றிபெற்றால்.. அதிபர் பதவியை பிடன் கைப்பற்றிவிடுவார். தற்போது 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
அவர் வெற்றிபெற இன்னும் 6 வாக்குகளே தேவை. குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

பேட்டி
இந்த நிலையில் தபால் வாக்குகளை எண்ணுவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பென்சில்வேனியா, மிச்சிகன், ஜார்ஜியாவில் டிரம்ப் வழக்கும் தொடுத்துள்ளார். இந்த நிலையில் டிரம்பின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பிடன் பேட்டி அளித்துள்ளார்.

பிடன்
பிடன் தனது பேச்சில், எங்களின் குரலை ஒடுக்க முடியாது. எல்லா தபால் வாக்குகளையும் எண்ண வேண்டும். கடைசி வாக்கு வரை கண்டிப்பாக எண்ண வேண்டும் இது அமெரிக்க ஜனநாயகத்திற்கான போராட்டம்.அமெரிக்கா பல போராட்டங்களை பார்த்து இருக்கிறது.

குரல்
அமெரிக்க சுதந்திரத்திற்காக, ஜனநாயகத்திற்காக பல போராட்டங்கள் நடந்து இருக்கிறது. அமெரிக்கா வீழ்ந்துவிடாது. யாரிடமும் நாம் சரணடைய கூடாது. நான் அதிபரானால் சிவப்பு, நீலம் என்ற பாகுபாடு இருக்காது. மக்களை ஒரே மாதிரி நடத்துவேன்.

ஒற்றுமை முக்கியம்
மக்கள் இடையே ஒற்றுமையும், அன்பும் நிலவுவது முக்கியம். நீண்ட வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நாம் வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது. 270 எலக்ட்ரல் வாக்குகளை வெல்வோம் என்பது உறுதியாகி உள்ளது. நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்று சொல்ல மாட்டேன்.

வென்று இருப்போம்
ஆனால் வாக்கு எண்ணிக்கை முடியும் போது நாம் வென்று இருப்போம். முடிவு நமக்கு சாதகமாக வரும். இது என்னுடைய தனிப்பட்ட வெற்றி கிடையாது. இது அமெரிக்காவின் வெற்றி, அமெரிக்க மக்களின் வெற்றி. இதை யாரும் எங்களிடம் இருந்து பறிக்க முடியாது என்று பிடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications