இவர்களை வைத்து போராட முடியாது.. சொந்த "லீகல் டீம்" மீதே பாய்ந்த டிரம்ப்.. புலம்பல்.. என்ன நடந்தது?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது கட்சியில் இருக்கும் சட்ட நிபுணர்கள் மீதும், வழக்கறிஞர்கள் குழு மீதும் கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. முழுமையான தேர்தல் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியே வர வாய்ப்புள்ளது.
தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

வெற்றி
பிடன் சில முக்கியமான இடங்களில் டிரம்ப்பை முந்தி வெற்றிபெற்று இருக்கிறார். டிரம்ப் முதலில் முன்னிலை வகித்த இடங்களில் பிடன் அவரை கடைசி கட்டத்தில் முந்தி வெற்றிபெற்றுள்ளார். மிச்சிகன், விஸ்கான்சின், அரிசோனா மாகாணங்களில் பிடன் வெற்றிபெற்றுள்ளார். தபால் வாக்குகள் சாதகமாக வந்த நிலையில் பிடன் கடைசி கட்டத்தில் இப்படி வெற்றிகளை பெற்று உள்ளார்.

வழக்கு
இந்த நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும், அதில் முறைகேடு நடக்கிறது என்று டிரம்ப் குற்றச்சாட்டு வைத்தார். இதற்காக அவர் ஜார்ஜியா, பென்சில்வேனியா, மிச்சிகன் மாகாணங்களில் வழக்கு தொடுத்தார். ஆனால் இங்கு தபால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நீதிபதிகள் மறுத்துவிட்டனர். சட்ட ரீதியான போராட்டத்திலும் டிரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார்.

பின்னடைவு
இந்த நிலையில் அடுத்தடுத்து சட்ட போராட்டங்களில் தோல்வி அடைந்த காரணத்தால், அதிபர் டிரம்ப் தனது கட்சியில் இருக்கும் சட்ட நிபுணர்கள் மீதும், வழக்கறிஞர்கள் குழு மீதும் கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது குடியரசு சட்ட குழுவில் இருக்கும் வழக்கறிஞர்கள் பலர் டிரம்பின் வழக்கில் ஆஜராக விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

என்ன நடந்தது
தற்போது டிரம்பின் வழக்குகளில் அவரின் நீண்ட கால நண்பர்களான குடியரசு கட்சியின் வழக்கறிஞர்கள் ஜெ செகுலோவ், வில்லியம் கான்சாவோய் ஆகியோர் ஆஜராகி வருகிறார்கள். ஆனால் இவர்களால் எல்லா மாகாணங்களிலும் ஆஜராகி வழக்குகளை சந்திக்க முடியாது. டிரம்ப் பல மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை, தேர்தல் முறைகேடு, தபால் வாக்கு என்று வழக்கு தொடுக்க உள்ளார்.

பல மாகாணம்
அரிசோனா, நெவாடா, பென்சில்வேனியா, ஜார்ஜியா, மிச்சிகன் என்று பல மாகாணங்களில் டிரம்ப் வழக்கு தொடுக்க இருக்கிறார். ஆனால் டிரம்ப் தொடுக்க உள்ள வழக்கிலும், அவரின் சட்ட போராட்டத்திலும் ஆஜராக பெரிதாக குடியரசு கட்சி வழக்கறிஞர்கள் ஆர்வம் தெரிவிக்கவில்லை. குடியரசு கட்சியில் இருக்கும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் டிரம்பிற்காக ஆஜராக மறுத்துள்ளனர்.

யாரெல்லாம்
குடியரசு கட்சியின் வழக்கறிஞர்கள், நோயால் பிரான்சிசுகோ, ஜோன்ஸ் டே, எம்மேட் பிளட், வில்லியம்ஸ் குரூப், கிளேடா மிட்சல் என்று யாருமே இதுவரை நடந்த வழக்குகளில் டிரம்ப் சார்பாக ஆஜராகவில்லை. இவர்கள் எல்லாம் அதிபர் டிரம்ப் பிரச்சாரம் செய்த போது உடன் இருந்தவர்கள். ஆனால் இவர்கள் யாருமே டிரம்ப் சட்ட போராட்டம் என்று கூறிய போது, அதில் ஆஜராகவில்லை.

மாற்ற வேண்டும்
இதனால் குடியரசு கட்சியில் இருக்கும் சட்ட குழுவில் புதிய வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு மாகாணங்களிலும் புதிய வழக்கறிஞர்கள் பணியில் எடுக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார். சட்ட போராட்டம் அடுத்த சில நாட்களுக்கு நீளும் என்பதால் டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications