உடைந்து நொறுங்கும் சிவப்பு கோட்டை.. டிரம்ப் பயந்தது போலவே நடக்கிறதே.. அடி மேல் அடி கொடுக்கும் பிடன்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பயந்தது போல தற்போது பெரும்பாலான தபால் வாக்குகள் பிடனுக்கு ஆதரவாக சென்று இருக்கிறது. அதிலும் குடியரசு கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட மாகாணங்களில் எல்லாம் டிரம்ப்பிற்கு எதிராக வாக்குகள் விழ தொடங்கி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்று நினைத்த டிரம்பிற்கு இந்த தேர்தல் பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது. 2016ல் 300+ எலக்டரல் வாக்குகளை பெற்று இமாலய வெற்றி பெற்ற டிரம்ப் இந்த முறை 250 வாக்குகளை கூட இதுவரை எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
வாயை திறந்தாலே பொய்... டிரம்ப்புக்கு எதிராக ஒன்றிணைந்த அமெரிக்க ஊடகங்கள்.. நேரலை ஒளிபரப்பு 'கட்'
மோசம்
அதிபர் தேர்தலில் இந்த முறை 160 மில்லியன் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதில் 101 மில்லியன் வாக்குகள் தபால் வாக்குகள் ஆகும். இந்த தபால் வாக்குகளை அதிக அளவில் ஜனநாயக கட்சியினர்தான் செய்துள்ளனர். இந்த நிலையில் பல்வேறு மாகாணங்களில் தபால் வாக்குகளை எண்ண எண்ண.. பிடன் முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளார். எங்கெல்லாம் பிடன் பின்னடைவை சந்தித்தாரோ அங்கெல்லாம்.. அதிக தபால் வாக்குகளை பெற்று பிடன் கம்பேக் கொடுத்துள்ளார்.
நேற்று எப்படி
நேற்று விஸ்கான்சின், அரிசோனா, மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் எல்லாம் முதலில் பிடன் பின்னடைவை சந்தித்துதான் இருந்தார். ஆனால் கடைசியில் திடீர் என்று தபால் வாக்குகள் அதிகமாக விழுந்த காரணத்தால்.. டிரம்ப் பின்னடைவை சந்திக்க பிடன் வெற்றிபெற்றார். அதிலும் விஸ்கான்சின் தொகுதியில் 20 ஆயிரம் தபால் வாக்கு வித்தியாசத்தில்தான் பிடன் வென்றார்.
அச்சம்
இப்படி தபால் வாக்குகள்தான் மொத்தமாக தேர்தல் முடிவுகளை மாற்றியது. இதனால் தபால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்தார். இதற்காக மிச்சிகன், பென்சில்வேனியா, ஜார்ஜியாவில் அவர் வழக்கு தொடுத்து அதில் தோல்வியும் அடைந்தார். தபால் வாக்கில் முறைகேடு நடக்கிறது என்று கூறி டிரம்ப் பிரச்சனை செய்தார்.
நிறுத்துங்கள்
தான் முன்னணி வகிக்கும் பென்சில்வேனியா, ஜார்ஜியா, அலாக்ஸா, நார்த் கரோலினா போன்ற மாகாணங்களில் உடனே வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி, தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறினார். தபால் வாக்கில் எங்கே பிடன் வென்றுவிடுவாரோ என்று டிரம்ப் அச்சம் தெரிவித்தார். ஜனநாயக கட்சியினர் பலர் தபால் வாக்குகளை பதிவு செய்து இருப்பதால் டிரம்ப் இப்படி அச்சப்பட்டார்.
மாற்றம்
தற்போது டிரம்ப் அச்சப்பட்டது போல ஜார்ஜியாவில் பிடன் அவரை முந்தி 1000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். கடைசியாக எண்ணப்பட்ட 30% தபால் வாக்குகள் பிடனுக்குதான் இங்கு ஆதரவாக வந்தது. அதேபோல் பென்சில்வேனியாவில் கடைசியாக எண்ணப்பட்ட 28% தபால் வாக்குகள் பிடனுக்கு ஆதரவாக வந்துள்ளது. இங்கு பிடனை விட டிரம்ப் 80000 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். இதை பிடன் தற்போது 10000 ஆக குறைத்துள்ளார்.
நெவாடா
அதேபோல் நெவாடாவிலும் 4000 வாக்குகள் முன்னிலை வகித்த பிடன் தற்போது 10000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மொத்தத்தில் வரிசையாக தபால் வாக்குகள் எல்லாம் பிடனுக்கு ஆதரவாகவே வருகிறது. அதிலும் பிடன் தற்போது விஸ்கான்சின், மிச்சிகன், அரிசோனா, ஜார்ஜியா போன்ற டிரம்பின் சிவப்பு கோட்டைகளில் நீல பெயிண்ட் அடித்து வருகிறார். இதெல்லாம் பாரம்பரியமாக குடியரசு கட்சி வென்ற மாகாணங்கள்.. இங்கு டிரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்து பிடன் வெற்றிபெற தொடங்கி உள்ளார்.