வெடிக்க தயாராகும் மத்திய கிழக்கு! ஈரானை சமாதானப்படுத்த அமெரிக்கா முயற்சி! சீனாவுடன் பேச்சுவார்த்தை
நியூயார்க்: சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்ட விவகாரம், மத்திய கிழக்கில் பூகம்பமாக வெடிக்க காத்திருக்கிறது. இந்நிலையில், நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது குறித்து சீனா, துருக்கி மற்றும் சவுதியுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் படைகள் மீது அவ்வப்போது சில தாக்குதல்களை தொடுத்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருந்த ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான் வாழி தாக்குதலை நடத்தியது. இதில் 2 ராணுவ ஜெனரல்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனால், இஸ்ரேல் மீது கடும் கோபத்தில் ஈரான் இருக்கிறது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மீது தாக்குதல் நடத்தலாம், உஷாராக இருங்கள் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. மட்டுமல்லாது ஈரானின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்க 'ஐயன் டோம்' அமைப்பை கூடுதலாக வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ஈரானின் தாக்குதலை தடுத்து நிறுத்த அமெரிக்கா தீவிரமாக இறங்கி வேலை செய்ய தொடங்கியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்த விவகாரம் குறித்து சீனா, துருக்கி மற்றும் சவுதியுடன் பேசியுள்ளார். மேலும் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இந்த மோதல் தனிப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
பிரிட்டன் சார்பில் டேவிட் கேமரூன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறார். இந்த உரையாடலில், "மத்திய கிழக்கை மோதலுக்கு ஈரான் இழுக்கக்கூடாது. வன்முறைக்கு வழி வகுக்கும் தவறான சாத்திய கூறுகள் குறித்தும் எச்சரித்துள்ளேன். தாக்குதலை தடுக்கவும், தணிக்கவும் ஈரான் செயல்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டதாக கேமரூன் கூறியுள்ளார்.
முன்னதாக "சிரியாவில் இனி எந்த தாக்குதலும் நடக்காது, அதற்கு நாங்கள் கேரண்டி. ஆனால், இஸ்ரேல் மீதான ஸ்பெஷல் மிலிட்டரி ஆப்ரேஷனை மட்டும் கைவிடுங்கள்" என்று ஈரானிடம் அமெரிக்கா கேட்டிருந்தது.
இந்த விஷயம் இஸ்ரேல் காதுக்கு செல்லவே, அதன் பிரதமர் நெதன்யாகு, "சிரியா மீதான தாக்குதல் தொடரும்" என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அந்த பக்கம் ஈரான், "பாலஸ்தீன மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறினால்தான் எங்கள் தாக்குதல் நிற்கும்" என்று கூறியுள்ளது. அதாவது உலகின் சர்வாதிகாரியா தன்னை காட்டிக்கொண்டிருந்த அமெரிக்காவின் அறிவுறுத்தல்களை சிறிய நாடுகளான இரண்டும் கேட்க மறுப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications