வாவ்.. 'காளிக்கு' இரட்டை குழந்தை பிறந்ததாம்.. ஆனால் இருவருக்கும் ஓராண்டு வித்தியாசமாம்.. எப்படிங்க?
நியூயார்க்: அமெரிக்காவில் 'காளி ஸ்காட்' எனும் இளம்பெண்ணுக்கு புத்தாண்டு அன்று இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இதில் என்ன சுவாரசியம் என்றால், இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு வருடம் வித்தியாசமாம்.. எப்படி? அங்கேதான் விஷயமே..!!
கடந்த ஓராண்டுக்கு முன்னர்தான் காளி ஸ்காட்டுக்கு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து அவர் கருவுற தொடங்கினார். வழக்கமாக பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 31ம் தேதியன்று ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்ய சென்றிருக்கின்றனர். ஆனால் மருத்துவர்கள் காளிக்கு பிரசவம் நடக்க இருப்பதை கண்டறிந்ததுள்ளனர். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆக சொல்லி இருக்கிறார்கள்.
இதனை எதிர்பார்க்காத காளி தனது நண்பர்களுக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்திருக்கிறார். உடனடியாக மருத்துவமனையில் குவிந்த நண்பர்கள் குழந்தை எப்போது பிறக்கும் என்று எதிர் பார்த்து காத்திருக்க தொடங்கியுள்ளனர். இதனால் மருத்துவமனையே கலகலப்பாக இருந்திருக்கிறது. நள்ளிரவில் குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் என்றும், ஒருவேளை இரட்டை குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் எனவும் பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர்.
முதல் குழந்தை
நேரமும் சென்றுகொண்டே இருந்துள்ளது சரியாக இரவு 7 மணியளவில் காளிக்கு இடுப்பு வலி வந்திருக்கிறது. மருத்துவர்கள் 31ம் தேதி இரவு குழந்தை பிறந்துவிடும் என்று கணித்திருக்கிறார்கள். ஆனால் 31ம் தேதி இரவு 11 மணி வரை குழந்தை பிறக்கவில்லை. எனவே 1ம் தேதியன்று காலை பிறக்கலாம் என்று நினைத்திருக்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக 11.30 மணியளவில் வலி தீவிரமடைந்துள்ளது. பின்னர் குழந்தை பிறப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சரியாக 11.55 மணிக்கு முதல் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை நல்ல ஆரோக்கியமாக எடையுடன் பிறந்திருக்கிறது.
இரண்டாவது குழந்தை
சரி எல்லாம் ஓகே என்று நினைத்துக்கொண்டிருக்கையில் பின்னாடியே மற்றொரு குழந்தை பிறந்திருக்கிறது. இக்குழந்தை ஜனவரி அதிகாலை 12.01 மணிக்கு பிறந்திருக்கிறது. அதாவது இரண்டும் இரட்டை குழந்தைகள்தான் ஆனால், இருவரும் பிறந்தது அடுத்தடுத்த வருடத்தில். இது காளிக்கு மட்டுமல்லாது அவரது உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு புத்தாண்டு அன்று கடந்த வருடத்தில் ஒரு குழந்தையும் அடுத்த வருடத்தில் ஒரு குழந்தையும் பிறப்பது என்பது மிகவும் அரிதாக விஷயம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மகிழ்ச்சி
இந்த பிரசவத்தையடுத்து பேஸ்புக்கில் தனது இரண்டு குழந்தைகளின் புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ச்சியை காளி பதிவு செய்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, "எனது குழந்தைகளில் ஒருவர் அவரது பிறந்தநாளை டிசம்பர் மாதம் 31ம் தேதியும், மற்றொருவர் ஜனவரி 1ம் தேதியும் கொண்டாடுவார். இது எங்களுக்கு இரட்டை மகிழ்ச்சியாகும். அவர்களுக்கும் இது இரட்டை மகிழ்ச்சிதான். எனக்கு இப்படி பிரசவம் நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இவர்களை இருவரையும் இணைக்கும் புத்தாண்டை போல இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இரட்டை குழந்தைகள்
சர்வதேச அளவில் இரட்டை குழந்தைகளின் மீதான ஈர்ப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார் போல கடந்த 30 ஆண்டுகளில் இரட்டை குழந்தைகளின் பிறப்பும் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செயற்கை கருவூட்டல் முறையும் இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கான ஒரு காரணமாக இருக்கிறது என்ற மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது மிகுந்த சிரமமான விஷயம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் ஒரே நேரத்தில் மூன்று உயிர்களுக்கான சத்துக்கள் கிடைப்பதில் தொடங்கி குறைமாத பிரசவம் வரை பிரச்னை இருக்கிறது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.