அம்பலமான அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு.. விமர்சிக்கும் இந்தியர்கள்.. வெள்ளை மாளிகை அதிகாரி பதில்
நியூயார்க் : ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி பீட்டர் நவெரா இந்தியாவை மீண்டும் விமர்சித்துள்ளார். இந்தியா, ரஷ்யாவின் எண்ணெய்யை லாபத்துக்காக மட்டுமே வாங்குகிறது. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன்பு அது எதையும் வாங்கவில்லை. இந்திய அரசின் சுழல் எந்திரம் அதிகமாக நகர்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.முன்னதாக இந்தியாவின் அதிக வரி விதிப்பு அமெரிக்க வேலைகளை பறிக்கிறது. ரஷ்ய எண்ணெய்யால் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாகவும் கூறியிருந்தார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ஆனால் இந்த பணம் உக்ரைனில் போர் தொடர காரணமாக இருப்பதாக கூறி அமெரிக்கா கண்டித்து வருகிறது. இந்தியா எண்ணெய் வாங்குவது தான் உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு பணம் கிடைக்க காரணமாக இருப்பதாகவும் அமெரிக்கா கூறி வருகிறது. இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க நேரடியாக எச்சரித்தது. எனினும் இந்தியா ஏற்கவில்லை..

இந்தியா திட்டவட்டம்
இதையடுத்து இந்தியாவிற்கு பரஸ்பரம் விதியாக 25 சதவீதமும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக 25 சதவீத அபராதமும் சேர்த்து, இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்து உள்ளது. இந்த வரிவிதிப்புக்கு பின்னர் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என அமெரிக்கா எதிர்பார்த்தது.ஆனால் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.
அமெரிக்கா கண்டிப்பு
அதேநேரம் அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய ஏற்றுமதியாளர்களை கடுமையாக பாதித்து உள்ளது. அத்துடன் இந்தியா-அமெரிக்கா உறவும் நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. ரஷியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்க அரசு அதிகாரிகள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டிரம்புக்கு அடுத்தபடியாக வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவெரா இந்தியாவை கடுமையாக சாடி வருகிறார்.
ரஷ்யா எண்ணெயில் லாபம்
ரஷியாவுக்கான எண்ணெய் நிதி மோசடி நிறுவனமாக இந்தியா இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். அண்மையில் எக்ஸ் தளத்தில் "இந்தியாவின் அதிக வரி விதிப்பு அமெரிக்க வேலைகளை பறிக்கிறது. ரஷிய எண்ணெய்யால் லாபம் சம்பாதிக்கும் இந்தியா, ரஷ்யாவின் போர் தளத்திற்கு சேர்க்கிறது. உக்ரைனியர்கள், ரஷ்யர்கள் கொல்லப்படுகிறார்கள். அமெரிக்க வரி செலுத்துவோர் மேலும் பலவற்றை செலுத்துகிறார்கள். இந்தியாவால் உண்மையை கையாள முடியாது என்று கூறினார்.
இந்தியர்கள் எதிர்ப்பு
பீட்டர் நவெராவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியா மட்டுமல்ல, சீனாவும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது. ரஷ்யாவிடம் பல நாடுகள் எண்ணெய் வாங்கி உள்ளனர். மேலும் ரஷ்யாவிடம் பல நாடுகள் பல்வேறு பொருட்களை இன்று வரை இறக்குமதி செய்து வருகின்றன. அமெரிக்காவே சில விஷயங்களை ரஷ்யாவிடம் வாங்கிவருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியா மட்டும் குறிவைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு
அத்துடன் இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்புக்காக ரஷியாவிடம் இருந்து சட்டப்பூர்வமாகவும், இறையாண்மையுடனும் எண்ணெய் வாங்குவது சர்வதேச சட்டத்தை மீறுவதில்லை என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா இன்றுவரை, யுரேனியம் போன்ற பல பொருட்களை ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்து வருது தற்போது அம்பலமான நிலையில். அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை பலரும் விமர்சிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications