கைது மிரட்டலுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்.. டிரம்புக்கு சவால்விட்ட இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானி
நியூயார்க்: எங்கள் கொள்கை நடவடிக்கைகளுக்கு குறுக்கே வந்தால் நிச்சம் கைது செய்வோம் என்று, நியூயார்க் மேயர் வேட்பாளர், இந்திய வம்சாவளியினரான 'ஜோஹ்ரான் மம்தானிக்கு' டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்த மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என மம்தானி பதிலளித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
புளோரிடாவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த டிரம்ப், "மம்தானியுடன் சேர்ந்துக்கொண்டு, அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகையை தடுப்பதாக இருப்பின் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்று கூறியிருந்தார். இது அமெரிக்க அரசியல் களத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கருத்துக்களுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள மம்தானி, "இத்தகைய கருத்துக்கள் நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், மிரட்டல். இந்த அமெரிக்கா வெளியிலிருந்து வந்தவர்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எனவே நாடு கடத்தப்படும் சம்பவங்களை குறைக்க எனது அதிகாரத்தை பயன்படுத்துவேன்.
ஆனால் இதற்காக டிரம்ப் என்னை கைது செய்யப் போவதாகவும், எனது குடியுரிமையை பறித்து, தடுப்பு முகாமில் அடைத்து நாடு கடத்தப் போவதாகவும் மிரட்டுகிறார். நான் எந்த சட்டத்தையும் மீறாத நிலையில், அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் எங்கள் நகரத்தை பயமுறுத்த அனுமதிக்க மாட்டேன். இதற்காகத்தான் அவர் என்னை மிரட்டுகிறார்.
டிரம்பின் மிரட்டல்கள் நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, நியாயத்தை கேட்கும் ஒவ்வொரு நியூயார்க் மக்களுக்குமான எச்சரிக்கையாகும். நீங்கள் குரல் கொடுத்தால், அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.
டிரம்ப் அதிபராக வந்த பின்னர் அவர் கொண்டு வந்த மிக முக்கிய கொள்கைகளில் ஒன்றுதான் 'அமெரிக்கா ஃபரஸ்ட்' எனும் திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சட்டவிரோதமாகவும், விசா காலம் முடிந்த பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். இதற்காக அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகளை டிரம்ப் தீவிரமாக வேலை வாங்கி வருகிறார். ஒரு நாளைக்கு இத்தனை பேரை பிடிக்க வேண்டும் என்று டார்கெட் வைத்து வேலை வாங்கி வருகிறார்.
இந்தியாவை சேர்ந்தவர்களும் கூட சமீபத்தில் போர் குற்றவாளிகளை போல நாடு கடத்தப்பட்டிருந்தனர். சோகம் என்னவெனில், அமெரிக்காவுக்காக உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்தவர்களை வெளியே போக சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள்? எனவே நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு இங்கு தங்க உரிமை இருக்கிறது என்று தொடர்ந்து பல்வேறு குரல்கள் எழுந்து வருகின்றன. இதைதான் மம்தானியும் எதிரொலித்திருக்கிறார்.
எதிர் வரும் நவம்பர் மாதம் நியூயார் நகரத்திற்கு மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் மம்தானி வெற்றி பெற்றிருக்கிறார். அவர் மேயராக வரும் பட்சத்தில் இந்த நாடு கடத்தல்கள் தடுக்கப்படும் என்று மம்தானி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications