இதுதான் இயற்கையின் இன்ப அதிர்ச்சி.. நீலகிரி விவசாயிகளுக்கு கொட்டும் பணமழை.. ஊட்டிக்கே ஜாக்பாட்
ஊட்டி: சுற்றுலாவிற்கு பெயர்போன நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை தாண்டி விவசாயமும் அதிகமாக நடக்கிறது. தேயிலை தவிர இங்கு ஊட்டி உருளைக்கிழங்கும் அதிகமாக பயிரிடப்படுகிறது. ஊட்டி உருளைக்கிழங்கின் விலை அடியோடு மாறியதால் நீலகிரி விவசாயிகளுக்கு பண மழை கொட்டுகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். இங்குள்ள கால நிலையும், சுற்றுலா தலங்களையும் விரும்பாதவர்களே இல்லை.. தமிழ்நாட்டில் ஏசி என்பது எந்த காலத்திலும் தேவைப்படாத மாவட்டம் என்றால் அது நீலகிரி மாவட்டம் தான். கால நிலை மட்டுமல்ல, தேயிலை தோட்டங்களும், காய்கறி தோட்டங்களும், அணைகளும், காட்டு வனவிலங்குகளும் கண்களுக்கு விருந்தாக இருக்கும். சுற்றுலா தான் நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக பலர் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல.. சுற்றுலா ஒரு பகுதிதான். விவசாயம் தான் அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு பிரதான தொழிலாக இருக்கிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மட்டுமல்ல கேரட், பீட்ரூட், காலிபிளவர், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டு வந்தாலும், அனைத்து சீசனிலும் போதுமான கொள்முதல் விலை கிடைப்பதால், உருளைக்கிழங்கு தான் அங்குள்ள விவசாயிகள் ஆர்வமுடன் பயிரிட்டு காட்டி வருகின்றனர்.
ஊட்டி உருளைக்கிழங்கு ருசி அதிகமாக இருக்கும் என்பதால் இதற்கு எப்போதுமே மவுசு அதிகம் ஆகும். நீலகிரி மாவட்டத்தில் விளையும் ஊட்டி உருளைக்கிழங்கு மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி காய்கறி ஏல மண்டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்னை, தூத்துக்குடி மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் அண்மைக் காலமாக கர்நாடகா மாநிலம் கோலார், குண்டல்பேட், ஹாசன், குஜராத் மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக காய்கறி மண்டிகளுக்கு கொண்டு வரப்படும் உருளைக்கிழங்கு வரத்து கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. இப்படியான சூழலில்
குளிர்பதன கிடங்கில் நீண்ட நாட்களாக வைத்த தரம் குறைந்த உருளைக்கிழங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதனால் ஊட்டியில் விளையும் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. ஊட்டி, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் ஊட்டி உருளைக்கிழங்கு கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.100 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. அதேநேரம் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்கு கிலோ ரூ.40-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
ஊட்டி உருளைக்கிழங்கு விலை அதிகரிக்க நீலகிரியில் பெய்யும் தொடர் மழை முக்கிய காரணம் ஆகும். நீலகிரி மாவட்டத்தில் பனிமூட்டம் காரணமாக உருளைக்கிழங்கு செடிகளில் சாம்பல் நோய் தாக்கும் அபாயம் இருக்கிறது. அத்துடன் செடி அழுகும் நிலையும் உள்ளது.இந்த சூழலில் நல்ல விலை கிடைப்பதால் உருளைக்கிழங்கு பயிரிட்டு உள்ள விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைப்பது அதிகரித்துள்ளது. கொள்முதல் விலை அதிகரித்து உள்ளதால் நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஊட்டி உருளைக்கிழங்கு கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரையிலும், பிற மாநில உருளைக்கிழங்கு ரூ.60 வரையிலும் விற்பனை ஆகிறது.












Click it and Unblock the Notifications