கனிமொழி சொன்ன வார்த்தை! உடனே அதிமுக ஆபிஸுக்கு போய் பார்க்கச் சொன்ன எடப்பாடி பழனிசாமி
நீலகிரி: அதிமுக அலுவலகம் சென்னையில்தான் உள்ளது, உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தாராளமாக வந்து பார்த்துவிட்டு செல்லலாம் என திமுக எம்பி கனிமொழிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களைக் காப்போம் "தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அவர் வருகை தந்திருக்கிறார். அப்போது அவர் பேசுகையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து அனைத்துத் துறைகளும் ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கின்றன.
அதற்கு ஓர் உதாரணம் டாஸ்மாக் கடைகள். ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக அந்த துறையின் அமைச்சரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ 15 ஆயிரம் கோடி ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை.
அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் இருப்பதாகவும் சென்னை அதிமுக தலைமை அலுவலகம் இல்லை என்றும் கனிமொழி பேசிக் கொண்டிருக்கிறார். உண்மையில் கனிமொழி கனவு கண்டிருக்கிறார் போல! சந்தேகம் இருந்தால் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அவர் வந்து பார்த்து விட்டு போகவும்.
அதிமுகவை பிளவு பட வைக்க எவ்வளவோ சதி செய்து பார்த்தார்கள். எதுவுமே நடக்கவில்லை. நீங்களும் ஆள் வைத்து அதிமுக அலுவலகத்தை நொறுக்கப் பார்த்தீர்கள். அதுவும் நடக்கவில்லை. கோடிக்கணக்கான தொண்டர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் எங்கள் கட்சியை யாராலும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது.
திமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களால் அண்ணா அறிவாலயத்திற்கு பிரச்சினை வந்த போது அதை மீட்டுக் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில் திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 7 மாதம்தான் ஆட்சி இருக்கிறது. குன்னூருக்கு ஏதாவது மிகப் பெரிய திட்டங்களை கொண்டு வந்திருக்கிறதா.. ? நீலகிரி மாவட்ட மக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டால் மேட்டுப்பாளையம், கோவை மருத்துவமனைகளுக்கு போக வேண்டிய நிலை இருந்தது.
எனவே அதிமுக ஆட்சியில் நீலகிரியில் சிறப்பான மருத்துவ சிகிச்சைக்கு 400 கோடி ரூபாயில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தேன். அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கான மருத்துவமனையை கொடுத்தோம்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் விலை உயர்வால் அடித்தட்டு மக்களும் தோட்டத் தொழிலாளர்களும் கடும் சோதனைக்குள்ளாகியிருக்கிறார்கள். இதை பற்றியெல்லாம் ஸ்டாலினுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை. அதனால்தான் அவர் பொம்மை முதல்வர், நிர்வாகத் திறமையற்றவர் என்கிறோம்.
நீலகிரியில் ஆன்லைன் பாஸ் முறை வந்துள்ளது. திமுக நீதிமன்றத்தில் சரியாக வாதாடாத காரணத்தினால் இப்படிப்பட்ட நிலை வந்திருக்கிறது. குறிப்பிட்ட அளவு வாகனம் தான் நீலகிரி செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீசனில்தான் அவர்களுக்குப் பிழைப்பு நடக்கும்.
ஆனால் இந்த விடியா அரசின் ஆட்சியில் தினந்தோம் 6000 வாகனங்களுக்கு மேல் வர முடியாது என்ற நிலை உள்ளது. எனவே மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் நீதிமன்றத்தில் மக்களின் பிரச்சினையை எடுத்துச் சொல்லி இதற்கு ஒரு தீர்வு காணப்படும்.
திமுக ஆட்சியில் போதை இல்லாத இடமே இல்லை. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, கூடலூர் 3 தொகுதிகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்ட வேண்டும் என்று விண்ணப்பித்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான அனைவருக்கும் அனுமதி கிடைக்கும்.
குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications