எமர்ஜென்சி நம்பரை நோட் பண்ணுங்க! கூடலூரில் நிலச்சரிவு அபாயம்.. உஷார் நிலையில் மாவட்ட நிர்வாகம்!
நீலகிரி: நீலகிரியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வயநாடு நிலச்சரிவின் கோரத் தாண்டவத்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியான நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணில் புதைந்தனர். ஏராளமானோர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்களின் நிலை என்ன ஆனது என்றே தெரியாத நிலையில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதிக்கு மேல் துவங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் குந்தா ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதனால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்தன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு, மின் விநியோகம் துண்டிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. அனைத்து துறைகளையும் உஷார் நிலையில் இருக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டும், கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
வயநாடு நிலச்சரிவு.. 5 நாள்களாக சூச்சிபாறா அருவி அருகே சிக்கிய 3 பேர்.. ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
அதேபோல் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நீரோடை அருகில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஊட்டி - கூடலூர் சாலையில் ஆகாச பாலம் அருகே அடிக்கடி மண் சரிவு ஏற்படும் நிலையில், மழை குறையும் வரை, இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டதன் பேரில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் தலா 30 வீரர்கள் கொண்ட 2 குழுவினர் என மொத்தம் 60 வீரர்கள் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு சென்றனர். அனைத்து மீட்பு கருவிகளுடன் டிரக் மூலம் 2 குழுவினர் நீலகிரி வந்தனர். அவர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரில் நிலச்சரிவு அபாயம் இருப்பின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் 27, 28ல் பெய்த கனமழையால் கூடலூர் அருகே உள்ள கோக்கால் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை காலங்களில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோக்கால் பகுதியில் வசிக்கும் மக்கள் தற்காலிக முகாம்களை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. முகாம்களில் தங்கம் விருப்பம் இல்லாதோர், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருந்தால் உதவி எண்களை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முக்கியமான அவசர தொடர்பு எண்கள்:
கூடலூர் 2 கிராம நிர்வாக அலுவலர் எண்: 93852 - 43552
கூடலூர் வருவாய் ஆய்வாளர் எண்: 86105 88152
கூடலூர் வருவாய் வட்டாட்சியர் எண் : 94450 00557
கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் எண் : 94450 00437












Click it and Unblock the Notifications