EXCLUSIVE: சிகரத்தில் இருந்தாலும் வளரவில்ல! தமிழ்நாட்டில் இப்படி ஒரு கிராமமா! கலங்கடிக்கும் வீடியோ!
நீலகிரி: சாலை வசதி இல்லாமல் தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு கூட தினமும் 8 கிமீ மேல் நடந்து செல்கின்றனர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பக்கத்தில் இருக்கும் ஒரு வன கிராம மக்கள். அவர்களின் உருக்கமான வாழ்க்கையை பற்றி விவரிக்கிறது இந்த ஒன்இந்தியா EXCLUSIVE செய்தி தொகுப்பு!
இன்றைய தலைமுறை குழந்தைகள் அதிகம் கேட்க கூடிய ஒரு கேள்வி இந்த காலத்தில் எல்லாம் இப்படி இருக்கா என்பதாக தான் உள்ளது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால் இந்த காலத்தில் எல்லாம் சாதி இருக்கா? இந்த காலத்தில் எல்லாம் அடிப்படை வசதி கூட இல்லாத இடங்கள் இருக்கா என்று அதிகம் கேட்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு கிடைக்க கூடிய Previlage மற்ற அனைவருக்கும் கிடைத்திருக்கும் என்று நம்பிக்கொண்டு இருப்பதால் தான்...
ஆனால் இன்னமும் எந்த அடிப்படை வசதியும் கிடைக்காமல், சாதிய படிநிலைகள் உறுதியாக கொண்ட பல கிராமங்கள் நம்முடைய தமிழ்நாட்டில் உள்ளது.
'சூப்பர்'.. அதிக வேக்சின் போட்டவர்கள் பட்டியலில் நீலகிரி முதலிடம்.. 2-வது எந்த மாவட்டம் தெரியுமா?
8 கிமீ நடக்க வேண்டும்
அப்படி ஒரு வன கிராமத்தை தேடி தான் நம்முடைய ஒன் இந்தியாவின் குழு சென்றது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே இருக்கிறது வாகப்பனை என்கிற வன கிராமம். சுமார் 50 குடும்பங்கள் அங்கு வசிக்கின்றனர். இருளர் சமூக மக்கள் வாழக்கூடிய இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால் கூட்ரோடு என்கிற இடம் வரை பேருந்தில் செல்ல முடியும். அங்கிருந்து 8 கிமீ மலை பகுதியில் அடர் காட்டுக்குள் நடந்து செல்ல வேண்டியிருக்கும். செல்லும் வழியில் காட்டு யானைகள், கரடி, அட்டை பூச்சிகளின் தொல்லைகள் என எப்போதும் அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருக்கும்.
வெளியுலக தொடர்பு இல்லை
இவற்றை எல்லாம் கடந்து தான் அந்த மக்கள் தினமும் தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு கூட வெளியே சென்று வருகிறார்கள். இந்த ஊரின் அமைப்பே கொஞ்சம் வித்தியாசமானது. மற்ற மலை கிராமங்களை போல மலையின் உச்சியிலோ அல்லது அடிப்பகுதியிலோ இந்த கிராமம் கிடையாது. மலையின் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருப்பது தான் அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைப்பதிலும் பெரும் சவால் உள்ளது. இதனாலேயே அந்த மக்கள் வெளியுலகத்துடன் அதிக அளவில் தொடர்பு இல்லாமலேயே இருக்கின்றனர்.
குழந்தைகளின் கல்வி பாதிப்பு
அந்த கிராமத்தில் வசிக்கக் கூடிய மக்கள் அனைவருமே அருகில் இருக்கும் எஸ்டேட்டில் வேலைக்கு செல்கின்றனர். குழந்தைகள் பலர் அருகே இருக்கும் கிராமங்களில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தங்கி படிக்கின்றனர். ஆனால் இந்த குழந்தைகள் எல்லாம் தங்களுடைய கல்வியை தொடங்குவது பெரும்பாலும் 10 வயதுக்கு பிறகு தான். அதுவரை அந்த குழந்தைகளுக்கு எந்த ஆரம்ப கல்வியும் கிடைப்பதில்லை. அங்குள்ள பெற்றோர்களால் தினமும் 8 கிமீ மலை மீது ஏறி சென்று குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது சவாலான காரியமாக உள்ளது. இதனால் பலரும் குழந்தைகளை தங்களுடன் எஸ்டேட் வேலைகளுக்கு அழைத்து செல்வதும் நடக்கிறது.
வன விலங்குகள் அச்சுறுத்தல்
வன விலங்குகள் அச்சுறுத்தல் இருக்கும் இடத்தில் குழந்தைகளையும் தனியாக அனுப்ப முடியாது. நம்முடைய ஒன் இந்தியாவின் குழு அங்கு சென்ற தங்கிய நேரத்தில் கூட அன்று இரவில் காட்டு யானை ஒன்று அந்த பகுதியில் மரங்களை உடைத்து போட்டுவிட்டு சென்று இருந்தது. காட்டு பன்றி, கரடிகள் அச்சுறுத்தல் கூட இருப்பதால் இரவு 7 மணிக்கு மேல் அந்த பகுதி மக்கள் யாரும் வெளியே சென்று வரவோ அல்லது வேறு ஏதேனும் தேவைகளுக்கு வருவதோ கிடையாது. நாம் சென்ற 2 நாட்களுக்கு முன்னர் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் இரவு 7 மணிக்கு தனியாக நடந்து வந்த ஒருவரை காட்டு யானை மிதித்து கொன்று இருக்கிறது.
கழிப்பறை கூட கிடையாது
இந்த அளவுக்கு அச்சுறுத்தல் இருக்க கூடிய நிலையிலும் கூட அந்த பகுதி பெண்கள் கழிப்பறை வசதி எதுவும் இல்லாததால் இரவு நேரங்களில் தான் காட்டு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பகல் நேரங்களில் போக முடியாத காரணத்தினால், இரவு நேரங்களில் வன விலங்குகளின் அச்சுறுத்தல் இருந்த போதிலும் கூட வேறு வழியின்றி செல்ல வேண்டிய கட்டாயத்தில் அந்த பகுதி பெண்கள் உள்ளனர். மருத்துவத்திற்கும் கூட அதே நிலை தான். பகல் நேரங்களில் யாருக்கும் உடல்நிலை சரி இல்லை என்றால் அவரை தூக்கிக்கொண்டு 8 கிமீ மலை மீது ஏறி செல்ல வேண்டும். இரவில் பிரச்சனை என்றால் விடியும் வரை காத்திருக்க வேண்டும்.
அடிப்படை வசதி இல்லை
இப்படி எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் தான் அந்த பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு மின்சார வசதி கூட 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் கிடைத்தது. குடி தண்ணீர் வசதி அருகே இருக்கும் கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகனின் முயற்சியில் சில வருடங்களுக்கு முன்னால் கிடைத்தது தான். அதுவரை அருகே இருக்கும் வன விலங்குகள் பயன்படுத்தக்கூடிய ஆற்று நீரை தான் எடுத்து வந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
விவசாயம் தொழில்
முன்பு விவசாயம் செய்து வந்த இந்த மக்கள் நாளடைவில் அதை கைவிட்டு கூலி தொழில்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர். இப்போது மீண்டும் விவசாயம் பக்கம் அம்மக்களை கொண்டு செல்லும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரம் அங்கு விளைவிக்க கூடிய பொருட்களை வெளியே கொண்டு செல்வதும் அந்த மக்களுக்கு சவாலான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் ஒரு சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே அம்மக்களின் நீண்டகால கோரிக்கையாகவும் உள்ளது.
சாலை மட்டுமே தீர்வு
ஏனெனில் சாலை என்கிற ஒரு அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதே அந்த மக்களின் அத்தனை தேவைகளையும் தடுக்கிறது. அரசாங்கம் ஏதேனும் திட்டங்கள் போட்டால் கூட அந்த பகுதி மக்களை சென்றடைவது கிடையாது. ஒருவேளை அங்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் பட்சத்தில் அரசாங்கத்தின் திட்டங்களை அங்கு எளிதில் கொண்டுசெல்ல முடியும். பின்னர், அந்த பகுதி குழந்தைகளின் ஆரம்ப கல்வியை மேம்படுத்த முடியும். மற்ற அத்தியாவசிய தேவைகளை கூட அங்கு ஏற்படுத்த முடியும்.
ஒரே தேவை!
ஆனால் இவை அனைத்துக்கும் தேவையாக இருப்பது ஒரேயொரு சாலை மட்டுமே. சமவெளி நிலப்பரப்பில் 8 கிமீ நடப்பது அத்தனை சவாலானது கிடையாது. மலை பகுதிகளில் காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தினசரி மேலே ஏறி இறங்குவது என்பது ரொம்பவே கொடூரமானது. இத்தனைக்கு பின்பும் யாராவது இன்னும் இப்படியெல்லாம் இருக்கிறதா? காட்டுக்குள் இயற்கையோடு அழகான வாழ்க்கை வாழலாம் என்பவர்களை தினமும் 8 கிமீ விலங்குகளுக்கு மத்தியில் அட்டை பூச்சிகளின் கடியுடன் மலை மேல் ஏறி இறங்கி தான் சொல்ல வேண்டும்!
சிகரத்தில் இருந்தாலும் நாங்கள் வளரவில்ல என்று பேராண்மை படத்தில் வரும் வரிகளை போலத்தான் இவர்கள் சிகரத்தில் இருந்தாலும் இன்னும் வளராமல் இருக்கிறார்கள்.. அரசு கண் வைத்தால் இவர்களின் வாழ்க்கையும் முன்னேறும்!