ஒரு வாரமாக பற்றி எரியும் நீலகிரி.. 5,000 ஏக்கர் வனப்பகுதி சேதம்.. ஹெலிகாப்டர் முயற்சியும் தோல்வி
நீலகிரி: தமிழ்நாட்டில் கோடை வெயில் கொதித்து கொண்டிருக்கிறது. வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கிறார்கள். மலைப்பிரதேசங்களிலும் இயல்பை விட அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. நீலகிரி வனப்பகுதியில் கடந்த வாரம் காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. சுமார் 5,000 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் சுமார் 65 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, காட்டு மாடு, கரடி, சிறுத்தை, மான், வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தமிழ்நாடு - கேரளா - கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் யானை வழித்தடங்கள் அங்குள்ளன.

நீலகிரி காட்டு தீ
பல வகையான புல்வெளிகள், அரிய வகை தாவரங்களும் நீலகிரி வனப்பகுதியில் உள்ளன. தமிழகம் முழுவதுமே கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. நீலகிரியிலும் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. பைக்காரா, கிளன்மார்கன் வனப்பகுதிகளில் கடந்த வாரம் அதி தீவிர காட்டு தீ உருவானது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வனத்துறையினர் அந்த காட்டுத்தீயை அணைப்பதற்கு தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதனிடையே கடந்த 24 ஆம் தேதி அவலாஞ்சி அருகே பார்சன்ஸ்வேலி வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு வேமகாக பரவியது. கடுமையான வெயில் மற்றும் காற்றின் வேகம் காரணமாக காட்டு தீ சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பரவியது.
தொடர்ந்து பரவும் தீ
இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் நிலவி வருகிறது. காட்டு தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. கோவை, திருப்பூர் ஈரோடு, சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பணியாற்றும் வனத்துறை ஊழியர்கள் நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வனத்துறையில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தீயணைப்புத் துறையில் 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு ஊழியர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் என்று பெரிய படையே இணைந்து அங்கு காட்டு தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஹெலிகாப்டர் மூலம் போராட்டம்
போர்கால நடவடிக்கையாக சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் நீலகிரி வரவழைக்கப்பட்டன. ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சிகள் செய்யப்பட்டன. அந்த முயற்சியும் பெரியளவுக்கு கைக்கொடுக்கவில்லை. நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு தீ கட்டுக்குள் வராமல் பற்றி எரிந்து பரவி வருகிறது.
காட்டு தீயை அணைப்பதற்கு வனத்துறையினர் இரவும் பகல் பாராமல் போராடி கொண்டிருக்கிறார்கள். இந்த காட்டு தீயால் நீலகிரியில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி சேதமாகியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நேற்று ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி கைவிடப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications