சுற்றுலாப் பயணிகளோட எத்தனை வருட கனவு? ஊட்டிக்கு விழுந்த குட் நியூஸ்.. சீக்கிரமே ரூட் மாறப்போகுது
நீலகிரி: ஊட்டிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாக குன்னூர் செல்லாமல் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லும் வகையில் 40 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணியானது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
மலைகளின் அரசி என்ற பெருமைக்குரியது ஊட்டி. கோவைக்கு அருகில் உள்ள இந்த ஊட்டி உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த கோடைவாசத் தலங்களில் ஊட்டியும் ஒன்று. இங்குள்ள குளுமையான சீதோஷ்ண நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக அமைந்து இருக்கும்.

இந்தியா மட்டும் இன்றி ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஊட்டிக்கு வருகை தருவதை காண முடியும். கோடை காலங்களில் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக ஊட்டிக்கு படையெடுப்பதை காண முடியும். வார இறுதி நாட்களான, வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் திருவிழா கூட்டம் போல இருக்கும்.
சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டிக்கு வரும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், சுற்றுலாப் பயணிகள் திட்டமிட்டபடி தங்கள் நினைத்த இடங்களுக்கு செல்ல முடியாமல் திரும்பி வரவேண்டிய நிலையும் ஏற்படும். வார இறுதி நாட்களில் தினமும் 10 முதல் 15 ஆயிரம் வாகனங்கள் மலை ஊட்டிக்கு வந்து செல்கின்றன. இதனால், ஊட்டி நகருக்குள்ளும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது.
இதன் காரணமாக பலமணி நேரங்களாக வாகனத்திலேயே செலவிட வேண்டிய நிலை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும். இதனால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நெடுஞ்சாலைத்துறை புதிய சாலை அமைக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கியது. இந்த புதிய சாலை மூலமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக ஊட்டிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
அதாவது குன்னூருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. 40 கோடி ரூபாய் மதிப்பில், இந்த புறவழிச் சாலையானது அமைக்கப்பட்டு வருகிறது.. இந்த சாலையின் தொலைவு 20.5 கிலோமீட்டர் ஆகும். இந்த சாலை மூலமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் மலைப்பாதையில் வரும் வாகனங்கள், காட்டேரி, கேத்தி பாலாடா, கொல்லிமலை, காந்திபேட்டை வழியாக ஊட்டிக்கு செல்லும் விதமாக பணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த சாலை பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால், குன்னூர் செல்லாமல் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும். இதனால், பயணிகளுக்கு பல மணி நேரம் மிச்சமாகும். தற்போது சாலை அமைக்கும் பணிகள் 80 சதவிகிதம் முடிந்துள்ளதால், இப்பணிகளை விரைவில் முடித்து, இரண்டாம் சீசனுக்குள் சமவெளி வாகனங்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள், காட்டேரி பகுதியில் இருந்து திருப்பி விடப்படும் என்றும் இந்த சாலை மூலமாக விரைவாக ஊட்டிக்கு செல்ல முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர். ஆண்டு தோறும் சீசனுக்கு ஊட்டி வரும் சுற்றுலாப்பயணிகள் டிராப்பிக்கில் சிக்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலையில், மாற்றுப்பாதை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications