ஜில் ஜில் சாரல்.. கொட்டித் தீர்த்த கனமழை.. வெள்ளக் காடான ஊட்டி.. வெப்பச் சலனத்தால் நீடிக்குமா மழை?
நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வெப்பசலனம் காரணமாக 3வது நாளாக கொட்டித் தீர்த்த கனமழையால் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக பாதிப்படைந்த நிலையில், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளமாக காட்சியளித்தது.
Recommended Video
தமிழகத்தில் கோடைக்காலம் வழக்கமாக மே மாதத்தில் தான் உச்சத்தில் இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி மாத இறுதியிலிருந்து வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது.
வெயிலின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தற்போது மார்ச் மாதத்தில் இருந்தே சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

கடும் வெயில்
வார இறுதி நாட்கள் மற்றும் கோடை விடுமுறையின்போது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைவாசஸ்தலங்கள் சென்று அங்கு மக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க தங்கி வருகின்றனர். வழக்கம் போலவே தற்போதும் மார்ச் மாதத்தில் இருந்தே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

ஊட்டியில் வெப்பசலனம்
அதே நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
கடும் வெயில் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தைவிட குறைந்த அளவில் காணப்பட்ட நிலையில் விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

கன மழை
இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக ஊட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பிறகு லேசாக சாரல் மழை பெய்யத் தொடங்கியது தொடர்ந்து சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் ஊட்டியில் முக்கிய சுற்றுலா பகுதிகளான படகு இல்ல சாலை, நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது.

3வது நாளாக மழை
இதனால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்த நிலையில் விவசாயிகளும் பொதுமக்களும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் வெப்பச்சலனம் குறைந்து குளிர்ந்த காற்று மாலை நேரங்களில் வீசிய நிலையில் ஈரப்பதம் அதிகரித்து விவசாயத்திற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் ஊட்டியில் கனமழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications