ஊட்டி குளிருது.. சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் ஊரே குலுங்குது.. எங்கெங்கும் மக்கள் தலைகள்!
ஊட்டி: உதகையில் தொடர் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
மலைவாசஸ்தலமான உதகையில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நிலவும் காலமாகும். அதே போல, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களிலும் கூட்டம் அலைமோதும்.
தற்போது பள்ளி தேர்வு விடுமுறை காலம், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் என்பதால் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். உதகையில் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு காணப்பட்டனர்.
மக்கள் கூட்டத்தால் திமிரும் ஊட்டி
குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் குவிந்திருந்த அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். உதகை தாவரவியல் பூங்காவில் வார இறுதி நாட்களை விட கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகளவு மக்கள் குவிந்திருந்தனர்.
வெளி மாநிலங்களிலிருந்தும்
தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால் ஊட்டியில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டமாக உள்ளது.
சூடான வியாபாரம்
இயற்கையான சீதோஷ்ண நிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறிய அவர்கள், தாவரவியல் பூங்காவில் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். சுற்றுலா பயணிகளின் வரவால் வர்த்தகமும் சிறப்பாக இருந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆங்காங்கு நெருக்கடி
சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரில் சிறிதுநேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மக்கள் அதிகளவு குவிந்ததால் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.