என்ன முதுமலைக்கு போறீங்களா? 4 நாட்களுக்கு ரிசார்ட்கள், ஹோட்டல்கள் மூடல்! ஏன் என்னாச்சு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 9 ஆம் தேதி வருகை தரவுள்ள நிலையில் 4 நாட்களுக்கு அங்குள்ள ஓய்வு விடுதிகள், ஹோட்டல்கள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு யானைகள் முகாமில் குட்டி யானைகளான ரகு, அம்முவை யானை பராமரிப்பாளர்களான பெல்லியும் பொம்மனும் பாசத்துடன் வளர்த்து வந்தார்கள்.
யானைக்கும் மனிதனுக்கும் இருக்கும் அந்த பாசத்தை கண்ட குறும்பட இயக்குநர் கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ் காட்டிலேயே 2 ஆண்டுகளாக தங்கியிருந்து 450 மணி நேரம் ஷூட்டிங்காக எடுத்து அதை குறும்படமாக்கினார்.

பின்னர் அந்த படத்திற்கு தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் என பெயரிட்டார். இந்த படம் அண்மையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதை நினைத்து முதல்வர் ஸ்டாலின் பெருமை பொங்க வாழ்த்துகளை தெரிவித்தார்.
அது போல் முதுமலை தம்பதியை நேரில் அழைத்து பாராட்டி இருவருக்கும் தலா ஒரு லட்சம் பரிசு வழங்கினார். அது போல் இயக்குநர் கார்த்திகியும் முதல்வர் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு ரூ 1 கோடி பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
அது போல் பிரதமர் நரேந்திர மோடியும் ட்விட்டரில் ஆஸ்கர் பெற்ற இயக்குநர் கார்த்திகிக்கும் குறும்படத்தில் நடித்த யானை தம்பதிகளான பெல்லி- பொம்மனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இயக்குநர் கார்த்திகியும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில் புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50 ஆவது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதும் உள்ள 53 புலிகள் காப்பகத்தில் கொண்டாடப்பட்ட உள்ளது. நாட்டில் உள்ள புலிகள் காப்பகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிட உள்ளார். பிரதமர் மோடி வரும் 9ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு செல்கிறார்.

இந்த நிகழ்வு முடிந்ததும் முதுமலை புலிகள் சரணாயலத்திற்கும் பிரதமர் மோடி வருகிறார். அப்போது ஆஸ்கர் ஆவணபடத்தில் நடித்த பொம்மன்- பெல்லியை முதுமலையில் சந்தித்து பாராட்டவிருக்கிறார். இதனால் பிரதமர் வருகையையொட்டி முதுமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன. அது போல் வரும் 6-ஆம் தேதி முதல் முதுமலையில் உள்ள ஓய்வு விடுதிகள், ஹோட்டல்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகையால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வரும் 6-ஆம் தேதி முதல் முதுமலையில் உள்ள ஓய்வு விடுதிகள், ஹோட்டல்கள் 4 நாட்கள் மூடப்படுகிறது. அது போல் ஏப்ரல் 7 முதல் 9 ஆம் தேதி வரை முதுமலையில் வனவிலங்குகளை பார்வையிட வாகன சவாரியும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications