கோடநாடு கேஸில் பரபரப்பு.. தனபாலிடம் விசாரிக்கலாம்.. சிபிசிஐடிக்கு உதகை நீதிமன்றம் அனுமதி
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கார் ஓட்டுநர் கனராஜ்ஜின் சகோதரர் தனபாலிடம் விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவையில்லை எனவும் சம்மன் அனுப்பி விசாரித்துக் கொள்ளலாம் என்றும் சிபிசிஐடிக்கு உதகை கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. மேலும் அங்கிருந்த முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இதுமட்டுமின்றி அப்போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இதேபோல் கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி கோடநாடு வழக்கோடு சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஜாமீனில் வெளி வந்த தனபால், அண்மையில் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது "என்னை சந்தித்தபோது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில்தான் 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார்" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் கோடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு வழக்கில் ஏற்கனவே 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கும் தனபால் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், தனபாலிடம் மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி அப்துல் காதர், ஏற்கனவே தனபால் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருப்பதும் தற்போது ஜாமினில் இருப்பதால் அவரை விசாரிக்க எந்த வித அனுமதியும் தேவையில்லை. தனபாலுக்கு சம்மன் அனுப்பி விசாரித்துக் கொள்ளலாம். அதற்கு எந்த தடையும் இல்லை" என்று கூறினார். நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளதால் விரைவில் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரரான தனபாலிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான், கோட நாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று தனபால் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் தனபாலிடம் மீண்டும் விசாரணை நடத்த இருப்பது வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications