பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டியவர் கைது.. 90'ஸ் கிட்ஸ் சாபம் பலித்தது!
ஊட்டி: பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர், தனது ஆருயிர் நண்பர்களால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில், பள்ளி மாணவி ஒருவருக்கு கோயிலும் பின்புறம் வைத்து மாணவர் தாலி கட்டும் வீடியோ ஒன்று சமூக தளங்களில் வைரல் ஆனது.
பார்த்தவர்கள் எல்லாம், 'என்னடா இது அநியாயம்' என்று அதிர்ச்சியாக, திருமணம் ஆகாத 90ஸ்'ஸ் கிட்ஸ் மட்டும், 'பாட்ஷா' படத்தில் ரகுவரன் வெடிகுண்டு வைக்கும் தகவலை ஜனகராஜ் சொல்லும் போது, ஒரு வெற்றுப் புன்னகையாக ரிப்ளையாக கொடுக்கும் ரஜினியைப் போல கடந்து சென்றார்கள்.
போலீசில் புகார்
எனினும், இந்த வீடியோவைப் பார்த்த குன்னூர் மக்கள், அந்த கோவில் தங்கள் பகுதியைச் சேர்ந்தது என்றும், மாணவி அணிந்திருந்த சீருடை அங்குள்ள பள்ளி ஒன்றின் சீருடை என்றும் குன்னூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
பள்ளிக்கே வரவில்லை
முதற்கட்டமாக, அந்த சீருடை கொண்ட பள்ளிக்கு சென்ற போலீசார், ஆசிரியர்களிடம் வீடியோவை காட்டி மாணவி குறித்து விசாரித்தனர். அப்போது, அந்த மாணவி ஒரு வருடத்துக்கு முன்பு அந்த பள்ளியில் 10ம் வகுப்பு படித்தவர் என்றும், அதன்பின் அவர் பள்ளி பக்கமே வந்ததில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.
கடும் எதிர்ப்பு
இதன்பிறகு, வாலிபர் குறித்து விசாரித்தபோது அவர் குன்னூர் கொலக்கம்பை சட்டன் பகுதியில் உள்ள கிளிஞ்சடா பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது, எல்லாத்தையும் கொட்டியிருக்கிறார். அதில், "நானும், அந்த மாணவியும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். ஆனால், வழக்கம் போல் எங்கள் காதலுக்கும் மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், எங்கள் காதலை பிரித்து விடுவார்களோ என்று நாங்கள் இருவரும் பயந்துவிட்டோம்.
மஞ்சள் கயிறு
எனவே, இருவரும் திருமணம் இருவரும் செய்துகொள்வோமா? என்று அந்த மாணவியிடம் கேட்டேன். இதற்கு அவரும் சம்மதிக்க, எனது நண்பர்களிடம் இது குறித்து தெரிவித்தேன். அவர்களும் இதற்கு ஒத்துழைப்பு தருவதாக கூறியதால், இருவரும் பள்ளிக்கு செல்வதாக கிளம்பி வந்து, கோவில் பின்புறம் மாணவியை நிற்க வைத்து மஞ்சள் கயிறை கட்டினேன்.
ஒரு வருடம் ஆச்சு
பிறகு, வீட்டில் அவர் தாலியை மறைத்து சமாளித்து வந்தார். ஒரு கட்டத்தில் மாணவியின் பெற்றோர், அவர் கழுத்தில் தாலி இருப்பதை கண்டறிய, அவர்களது குடும்பத்தில் பெரும் பிரச்சனை எழுந்தது. பிறகு, நான் கட்டிய தாலியை கழற்றி எறிந்து விட்டு அந்த மாணவியை திருச்செங்கோட்டுக்கு அழைத்துச்சென்று விட்டனர். அவர்கள் சென்று ஒரு வருடம் ஆன பின்பும், இதுவரை அவர் குறித்து வேறு எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை.
போலீஸ் கைது
ஒரு வருடத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவை எனது நண்பர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்ட, அது தற்போது வைரலானதால் தான் சிக்கிக்கொண்டேன்" என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டோபரை போலீசார் கைது செய்தனர்.