"ஆளுநரை வழி நடத்தி.. கடமையை உணர்த்தும் முதல்வர் நம்ம முதல்வர்!" புகழ்ந்து தள்ளிய ஆ ராசா
உதகை: உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எம்பி ஆ ராசா, சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கோடைக் காலத்தில், வெயிலின் தாக்கத்தில் இருந்து எஸ்கேப் ஆகப் பொதுமக்கள் செல்லும் முதல் இடம் ஊட்டி தான். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஊட்டி உருவாக்கப்படு சுமார் 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இப்போதுள்ள உதகை நகரை 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்தவர் ஆங்கிலேயர் ஜான் சல்லிவன். இவரைச் சிறப்பிக்கும் வகையில் ஊட்டி 200 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

தொல் திராவிடர்கள்
இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், உதகை தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நீலகிரி எம்பி ஆ ராசா, "நீலகிரியில் வசிக்கும் மூத்த பழங்குடியினர்கள் குறித்து உரிய ஆய்வு செய்து தமிழறிஞர் கால்டுவெல் நூல் ஒன்றை எழுதி இருந்தார். அதில் அவர் நீலகிரியில் வசிக்கும் மூத்த பழங்குடியினர்களை தொல் திராவிடர்கள் என்றே குறிப்பிட்டுள்ளார்.

டேன் டீ
தமிழக அரசின் டேன் டீ (TANTEA) நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதை மேம்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் தெரியப்படுத்தியுள்ளோம். அதேபோல கூடலூர் பிரிவு 17 - நிலம் பிரச்சனையையும் முதல்வருக்கு எடுத்துச் சென்றுள்ளோம். இந்த விவகாரங்களில் உயர் அதிகாரிகளைக் கூட்டி அவரே உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

கருணாநிதி ஆட்சி
தற்போதுள்ள அரசு நீலகிரிக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளைக் கொடுத்துள்ளது. உதகை 200 விழாவுக்கு நிதி தேவை என்று கோரிக்கை விடுத்தவுடன் உடனடியாக 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியவர் முதல்வர். இங்குத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை தீர்வு, பழங்குடியின மக்களுக்கு மின் இணைப்பு, பட்டா உள்ளிட்ட பல திட்டங்கள் கருணாநிதி ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.

திமுக
நீலகிரிக்கு என்ன தேவையாக இருந்தாலும், என்ன பிரச்சனையாக இருந்தாலும் ஓடி வருபவன் நான். ஆட்சியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக ஓடி வருவது திமுக தான். நீலகிரியில் ரூ 34 கோடி செலவில் 20 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ 56 கோடி மதிப்பீட்டிலான 28 பணிகள் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜான் சல்லிவன்
இந்த உதகை நகரைக் கட்டமைத்தவர் ஜான் சல்லிவன். பிரிட்டிஷாருக்கு எதிராகச் செயல்பட்ட பிரிட்டிசார் என்ற புத்தகத்தில் ஜான் சல்லிவன் பெயரும் இடம்பெற்றுள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது. 1921இல் நடைபெற்ற உதகை 100வது ஆண்டு விழாவில் இந்திய வைஸ்ரயாக இருந்த வெலிங்டன் கலந்து கொண்டார். அப்போது வெலிங்கடன் ஜான்சலிவனை வணங்குகின்றேன் என்று சொல்லியே தனது உரையை ஆரம்பித்தார்.

ஆளுநரை வழிநடத்தும் முதல்வர்
தனக்குப் பின்னர் உதகையின் 200வது ஆண்டு விழா நடைபெறும் என்று அப்போது குறிப்பிட்ட வெலிங்கடன், அதில் ஒரு கவர்னர் பங்கேற்பார் என்றும் அப்போது அவரும் அவரது மனைவியும் விண்ணுலகில் இருந்து வாழ்த்துவோம் எனத் தெரிவித்தார். இப்போது ஆளுநர் இல்லை. இன்று இருக்கும் ஆளுநரை நெறிப்படுத்தும் முதலமைச்சராக நமது முதலமைச்சர் உள்ளார். ஆளுநரின் கடமையை உணர்த்தும் முதல்வர் நமது முதல்வர். விண்ணுலகில் நம்பிக்கை இல்லையென்றாலும் அவர்களது வாழ்த்துகள் முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைக்கும்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications