வயநாட்டை போலவே நீலகிரியில் நிலச்சரிவு? தீயாக பரவும் தகவல்.. மாவட்ட ஆட்சியர் தந்த பரபர விளக்கம்
நீலகிரி: வயநாட்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையே வயநாட்டைப் போலவே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரியிலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதற்கிடையே இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாகத் தீவிர மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த 2 வாரங்களாகத் தீவிர மழை கொட்டி வந்த நிலையில், இப்போது தான் கொஞ்சம் மழை விட்டுள்ளது.

இந்த கனமழையால் அங்கே பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதைச் சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர்: நீலகிரியில் கனமழை தொடரும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், மேலும், தேசிய பேரிடர் பாதுகாப்புப் படையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியில் முகாமிட்டுள்ளனர். தேசியப் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு உபகரணங்களை ஆட்சியர் லட்சுமி பவ்யா இன்று நேரில் பார்வையிட்டார்.
வதந்தி: வயநாட்டைப் போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது முழுக்க முழுக்க வதந்தி என்ற மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, சமூக வலைத்தளங்களில் இதுபோல பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வயநாட்டைப் போலவே நீலகிரியிலும் நிலச்சரிவு ஏற்படும் என்று பல வகையான வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் மக்கள் பீதிக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆனால், இது முழுக்க முழுக்க வதந்தி.. இதுபோன்ற வதந்திகளை சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். தெரிந்தே இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தயார் நிலை: நீலகிரியில் மழை பெய்து வரும் நிலையில், பாதிப்பு ஏதாவது ஏற்பட்டால் அதைச் சமாளிக்க வருவாய்த் துறையினர், தீயணைப்பு வீரர்கள், போலீஸார், வனத் துறை அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் தயார் நிலையில் உள்ளனர். எதாவது பிரச்சினை ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 1077 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.. மக்கள் எதாவது பிரச்சினையை எதிர்கொண்டால் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்.
வயநாடு சோகம்.. நீலகிரியில் முன்னெச்சரிக்கை! சென்னை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
உடனடி நடவடிக்கை: இரவு நேரங்களில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம். பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்க ஏதுவாக பல்வேறு துறைகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் அடங்கிய 42 குழுக்கள் தயாராக இருக்கிறது. மழையால் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்குத் தேவையான முகாம் மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்து தரவும் தயாராக இருக்கிறோம்.
இங்கே உள்ள நிலவரத்தை முதல்வர் நேரடியாகக் கண்காணித்து வருகிறார். தேவையான அறிவுறுத்தல்களை எடுக்க அறிவுறுத்தி இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் எங்கெல்லாம் மண் சரிவு ஏற்படும் ஆபத்து இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய புவியியல் துறை அதிகாரிகள் இந்த வாரமே நீலகிரி வருகிறார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications