இதுக்கு இல்லையா என்டு.. டிஜிட்டல் அரெஸ்ட்.. நீலகிரி ஐ.டி பெண் ஊழியருக்கு 8 நாட்கள் டார்ச்சர்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 26 வயது பெண் ஐடி ஊழியருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என அந்தப் பெண்ணை 8 நாட்கள் எங்கும் நகர விடாமல் டார்ச்சர் செய்துள்ளனர். மேலும் அவரிடம் ரூ.16 லட்சம் பணத்தை பறித்து மோசடி செய்துள்ளனர்.
தமிழகத்தில் சைபர் க்ரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் டிஜிட்டல் அரெஸ்ட் என்று மிரட்டி வயதானவர்களை குறிவைத்து பணம் பறிக்கும் மோசடி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தற்போது அந்த மோசடியில் இளைஞர்களையும் குறிவைக்க தொடங்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் 26 வயது பெண் வசித்து வருகிறார். இவர் பிரபல ஐ.டி நிறுவனத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் அடிப்படையில் வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. சர்வதேச கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, "மும்பையிலிருந்து சீனாவுக்குச் செல்லும் பார்சல் ஒன்றில் போதைப் பொருட்கள் உள்ளன. அதே பார்சலில் உங்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் போன்றவயும் உள்ளது. அதனால் உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இதுதொடர்பாக மும்பை சைபர் க்ரைம் போலீஸிடம் இருந்து அழைப்பு வரும்." என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளனர்.
இதனால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். சில நிமிடங்களில் அந்தப் பெண்ணுக்கு ஸ்கைப் ஆப் மூலம் வீடியோ கால் வந்துள்ளது. "உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம். விசாரணை முடியும் வரை எங்கும் நகரக் கூடாது அழைப்பையும் துண்டிக்கக் கூடாது." என்று மிரட்டியுள்ளனர். "மேலும் இதுகுறித்து வேறு யாரிடமும் தகவலை கசியவிட்டால் உங்களுக்கு பெரிய சிக்கல் ஏற்படும்." என்றும் அவர்கள் வார்னிங் கொடுத்துள்ளனர்.
இந்த மிரட்டல்களால் அந்தப் பெண் பயந்துள்ளார். கடந்த 8 நாட்களாக உண்ணாமலும், உறங்காமலும் இயற்கை உபாதைகளுக்குக் கழிக்க முடியாமல் தனி அறையில் தவித்துள்ளார். " உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் எங்களுக்கு அனுப்ப வேண்டும். நாங்கள் அதை ஆய்வு செய்துவிட்டு உங்களுக்கு திரும்ப அனுப்புகிறோம்." என கூறியுள்ளனர்.
அதை உண்மை என்று நம்பி அந்தப் பெண் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16 லட்சத்தை அவர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். பணம் அனுப்பிய உடனே அந்த அழைப்பை துண்டித்துள்ளனர். அந்தப் பெண் அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டு பணம் கேட்க முயற்சித்துள்ளார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை.
இதுகுறித்து அந்தப் பெண் நீலகிரி சைபர் க்ரைம் காவல்துறையால் புகார் அளித்தார். அவரின் புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நீலகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி சைபர் க்ரைம் காவல்துறையினர் கூறுகையில், "டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி அதிகரித்து வருகிறது. நீலகிரியில் இந்தாண்டு மட்டும் டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் மிரட்டி 28 மோசடி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
ரூ.68 லட்சம் பணம் மோசடி செய்து பறிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்துதான் மோசடி செய்கிறார்கள். அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்." என்றனர்.












Click it and Unblock the Notifications