நடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா
குன்னூர் அருகே கோயிலுக்குள் கரடி நடமாட்டம் காரணமாக மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஊட்டி: நடுராத்திரி... கோயிலுக்குள் வாக்கிங் வந்த கரடி அங்கிருந்த எண்ணெய்யை குடித்து ஏப்பம் விட்டு சென்றிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதற்கு காரணம், மனிதர்கள் வனப்பகுதிக்கு உட்பட்ட இடங்களில் கட்டிடங்களை கட்ட ஆரம்பித்துவிட்டதால், விலங்குகள் காட்டிலிருந்து ஊருக்குள் சாப்பாடு, தண்ணீர் தேடி வர ஆரம்பித்துவிட்டன.
குறிப்பாக தேயிலை தோட்டப்பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த கரடிகள் இப்போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் புகுந்து விடுகிறது. இரவு நேரத்தில் ரோட்டில் மக்கள் நடமாட்டம் இருப்பதில்லை என்பதால் ஹாயாக வலம் வருகிறது.
விளக்குகள்
பூட்டியிருந்த கடைகளை அடித்து நொறுக்கி உள்ளிருக்கும் உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு போகிறது. முக்கியமாக கோயில்கள் கண்ணில் தென்பட்டால் கரடிக்கு எக்ஸ்ட்ரா சந்தோஷம். ஏனென்றால், அங்கு ஏற்றி வைத்திருக்கும் விளக்குகளில் உள்ள எண்ணெயை மொத்தமாக குடித்துவிட்டு செல்கிறது.
படாத பாடு
இப்போதுகூட, குன்னூர் அருகே சோகத்தொரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கோயிலின் கதவு பூட்டப்பட்ட நிலையிலும், ஒரு கரடி கோவிலுக்குள் நுழைகிறது. பூட்டியிருந்த கதவின் பூட்டை உடைக்க படாதபாடு படுகிறது.
எண்ணெய் பாட்டில்
கடைசிவரை அதனால் முடியவில்லை. பிறகு சாமி சிலை உள்ள மாடத்தில் ஏறி கொள்கிறது. அங்கிருந்த எண்ணெயை உறிஞ்சி குடிக்கிறது. பிறகு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலையும் திறந்து குடித்து விட்டு ஒரு பெரிய சத்தத்தை எழுப்பி கொண்டே கோயிலுக்குள் இங்குமங்கும் உலாத்துகிறது.
ஏப்பம் விட்ட கரடி
இந்த சத்தம் ஏப்பமா, அல்லது சந்தோஷமா என தெரியவில்லை. ஆனால் சத்தத்தை கேட்டதும் ஊர் ஜனங்களே எழுந்து வந்துவிட்டார்கள். கோயிலிலிருந்து சத்தம் கேட்டதால், உள்ளே எட்டி பார்த்தால், கரடி வாக்கிங் போய் கொண்டிருந்தது. இதையடுத்து, குடியிருப்புவாசிகள் பலத்த கூச்சல் போட்டார்கள்.
மக்கள் கோரிக்கை
இதை கேட்டதும், கரடி வேக வேகமாக பக்கத்திலிருந்த முட்புதருக்குள் ஓடி மறைந்து கொண்டு, அங்கிருந்து கொஞ்ச நேரத்தில் நைசாக மறைந்து விட்டது. ஊருக்குள் இப்படி கரடி வந்துவிட்டதால், கூண்டு வைத்து எப்படியாவது அதை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.