ஊட்டி போறீங்களா?.. உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உதகை - குன்னூர், உதகை - கேத்திக்கு சிறப்பு ரயில்..
நீலகிரி: மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை செப்டம்பர் 22 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உதகை - குன்னூர், உதகை - கேத்தி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899ம் ஆண்டு இந்த மலை ரயில் சேவை துவங்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமாகவும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் இந்த மலை ரயிலில் இருந்து மலைகள், அடர்ந்த வனப் பகுதிகள், அருவிகள் என இயற்கைக் காட்சிகளைக் கண்டவாறே பயணம் மேற்கொள்ளும் அலாதியான அனுபம் கிடைக்கும்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகை வரை நீலகிரி மலை ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பகல் 12.30 மணிக்கு உதகையைச் சென்றடையும். இந்த மலை ரயிலில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். இந்த மலை ரயிலில் பயணிக்க வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதால் கோடை சீசனில் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த கோடை சீசனிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில், உதகை - குன்னூர் மற்றும் குன்னூர் - உதகை இடையே இம்மாதம் இறுதிவரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு உதகைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பின்னர், உதகையில் இருந்து குன்னூருக்கு இயக்கப்பட்டது. அதேபோல, உதகை - கேத்தி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
இந்த சிறப்பு மலை ரயிலில் வெளிநாட்டு மற்றும் வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் பயணித்தனர். இந்த மலை ரயிலில் 80 முதல் வகுப்பு இருக்கைகளும், 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் உள்ளன. இந்நிலையில், மண் சரிவு மற்றும் கன மழை எச்சரிக்கை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் சேவை செப்டம்பர் 22 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்ய விரும்பும் மலை ரயில் சேவை மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், குன்னூர் - உதகை, உதகை - குன்னூர், உதகை - கேத்தி இடையே மலை ரயில் இயக்கப்படுவது தற்போது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications