பிரான்ஸ் அதிபருக்கு சிதார் பரிசளிப்பு.. மனைவிக்கு தென் இந்தியாவில் இருந்து சென்ற கிஃப்ட்! வாவ் செம
பாரீஸ்: பிரதமர் நரேந்திர மோடி இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், அங்கே அவர் டாப் தலைவர்களுக்கு அளித்த பரிசுப் பொருட்கள் பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கே அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடன் ஆலோசனையும் நடத்தினார்.

முன்னதாக அவர் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பேசினார். இதில் அவர் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் அறிவித்தார்.
பிரதமர் மோடி: இதன் மூலம் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் இந்தியர்கள் இந்திய ரூபாய் மூலமே பணம் செலுத்தலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உறவு எந்தளவுக்கு இணக்கமாக இருக்கிறது என்பதையே இது பிரதிபலிப்பதாக இருக்கிறது.
பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அங்குள்ள டாப் தலைவர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கினார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன், பிரான்ஸ் நேஷனல் அசெம்பிளியின் தலைவர் யேல் பிரவுன்-பிவெட் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.
சிதார்: இந்த பரிசுகள் இந்திய ஜவுளி, கலை மற்றும் கைவினை திறன் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. முற்றிலும் சந்தன மரத்தால் வடிவமைக்கப்பட்ட சிதாரை அதிபர் மேக்ரானுக்கு பிரதமர் மோடி வழங்கினார். தென்னிந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு பழங்கால கைவினைப் பொருள் தான் இந்த சிதார் ஆகும். இதில் இந்தியாவின் தேசியப் பறவையான மயில், சரஸ்வதி தேவி, விநாயகர் ஆகியோரின் உருவங்களை இடம் பெற்றிருக்கும்
இம்மானுவேல் மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரானுக்கு போச்சம்பள்ளி பட்டுச் சேலையைப் பரிசாக வழங்கினார். இது சந்தனப் பெட்டியில் வைத்து வழங்கப்பட்டன. தெலுங்கானாவில் உள்ள போச்சம்பள்ளியில் உருவாகும் இந்தப் பட்டுப் புடவைகள் அதன் துடிப்பான வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளுக்குப் பெயர் பெற்றது.
அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்னுக்கு 'மார்பிள் இன்லே ஒர்க்' மூலம் அலங்கரிக்கப்பட்ட டேபிள் பரிசாக வழங்கப்பட்டது. ராஜஸ்தானின் உயர்தர பளிங்கு மூலம் கவனமாக இது ரெடி செய்யப்பட்டிருந்தது.
செலக்ஷன் எப்படி: பிரான் நாட்டின் சட்டமன்றத்தின் தலைவரான யேல் பிரவுன்-பிவெட் உலகளவில் புகழ்பெற்ற காஷ்மீரி கம்பளம் பரிசாகத் தரப்பட்டது. பிரெஞ்சு செனட்டின் தலைவர் ஜெரார்ட் லார்ச்சருக்கு சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட யானை உருவம் வழங்கப்பட்டது. இந்தியக் கலாச்சாரத்தில் ஞானம், வலிமை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தையே யானை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் வளமான பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பரிசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்,
முன்னதாக நேற்று அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். பிரான்சில் உள்ள இந்தியர்களுக்கு நீண்ட கால விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி அதை வரவேற்பதாகக் குறிப்பிட்டார். மேலும், பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அதன் வளாகங்களைத் திறக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications