பச்சிளம் குழந்தைகளையும் விடவில்லை.. பார்க்கில் இளைஞர் செய்த காரியம்.. 2 குழந்தைகள் கவலைக்கிடம்!
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் இளைஞர் ஒருவர் திடீரென பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைச் சரமாரியாகக் குத்திய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இப்போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. அங்கே ஆல்ப்ஸ் மலையில் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை திடீரென ஒருவர் கத்தியால் குத்திய ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
குழந்தைகள் மட்டுமின்றி, இளைஞர்கள் சிலரையும் அந்த நபர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ்: இந்தத் தாக்குதல் குறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.. அந்நாட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் குழந்தைகளைக் கத்தியால் குத்திய நபர் ஓடுவதும் அவரை பிடிக்க முயல்வதும் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் அவரை தடுக்க முயல்கிறார். இருப்பினும், அவரிடம் இருந்து தப்பும் அந்த நபர் பக்கத்தில் இருந்த குழந்தையை பலமுறை குத்துகிறார்.
30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் சிரியாவைச் சேர்ந்தவர்.. அவருக்குக் கடந்த ஏப்ரல் மாதம் தான் ஸ்வீடனில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அந்த நபர் முதலில் பார்க்கில் அங்கும் இங்கும் வெறித்தனமாக ஓடியுள்ளார்.. அவரை பார்க்கும் போதே அங்குள்ளவர்கள் சற்று அஞ்சியுள்ளனர். அப்போது தான் திடீரென அவர்களைத் தாக்கியுள்ளனர்.
மோசமான தாக்குதல்: ஒரு கட்டத்தில் பலரும் அவரை சூழ்ந்துவிடவே அவர் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து ஆன்னிசி ஏரியின் கரைக்கு அருகே அவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் சுமார் மூன்று வயது இருக்கும் இரண்டு குழந்தைகள், ஒரு இளைஞர் இந்தத் தாக்குதலில் மோசமாகப் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தின் எல்லைக்கு அருகில் பிரஞ்சு ஆல்ப்ஸில் உள்ள அன்னேசி என்ற இந்த இடம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. இங்கே தான் இந்தக் கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இதைக் கோழைத்தனத்தின் தாக்குதல் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் விமர்சித்துள்ளார். ஒட்டுமொத்த நாடும் சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். மேலும், அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் இதற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதிகரிக்கும் மக்கள் எதிர்ப்பு: முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டில், மொஹமட் மேரா என்ற ஒருவர் தெற்கு நகரமான துலூஸில் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். தெருவில் இறங்கிய அவர் போவோர் வருவோரைக் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளினார். இதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குறிப்பாக அவர் யூதப் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதற்கு முன்பு, 2020ஆம் ஆண்டு பாரீஸ் புறநகரில் உள்ள பள்ளிக்கு அருகில் ஆசிரியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வருவோரைக் கண்காணிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications