அக்னிபாத்தால் அக்னி குண்டமான பீகார்.. 22 ரயில்கள் ரத்து - 5 ரயில்களின் நேரம் மாற்றம்
பாட்னா : இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் மத்திய அரசின் புதிய அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில்ராணுவ பயிற்சிபெறும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டு உள்ளதால் 22 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

யாருக்கு வேலை?
17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

நாடு முழுவதும் போராட்டம்
இந்த புதிய திட்டத்துக்கு ராணுவத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பீகாரின் முசாபர்பூர் நகரில் நெடுஞ்சாலையை மறித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், பக்சாரில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது.

22 ரயில் சேவைகள் ரத்து
குறிப்பாக பீகாரின் பபுவா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ரயில் மீது தாக்குதல் நடத்தினர். டயர்களுக்கு தீ வைத்து ரயில் தண்டவாளங்களில் வீசியதால் ரயில் வெட்டிகள் தீப்பிடித்து எரிந்தனர். ஜெஹன்னாபாத் பகுதியில் இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறின. தொடர் பதற்றம் காரணமாக பீகாரில் 22 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கிழக்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது. மேலும் 29 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 5 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2 ஆண்டுகள் நடைபெறாத ராணுவ ஆள்சேர்ப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெறவில்லை. இதற்காக தயாராகி வந்த ஏராளமான இளைஞர்கள் தற்போது மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தால் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது. ராணுவ பணிக்காக 2 ஆண்டுகளாக பலர் காத்துள்ள நிலையில், ராணுவம் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

4 ஆண்டுகள் போதாது
எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு கூட 5 ஆண்டுகள் வழங்கப்படும்போது வெறும் 4 ஆண்டுகளை கொண்டு எங்களால் என்ன செய்ய முடியும்?" என்று பக்சாரில் ரயில் மறியலில் ஈடுபட்ட ராணுவ பயிற்சி பெரும் இளைஞர் கேள்வி எழுப்பி இருக்கிறார். மத்திய அரசின் இந்த திட்டம் இளைஞர்களை முட்டாள்களாக்குவதாகும் என மற்றொரு இளைஞர் குற்றம்சாட்டி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications