"அன்பு மலர்களே".. கங்கையில் தொலைந்த நபர்.. 14 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தோடு சேர்ந்த சுவாரசியம்!
பாட்னா: கங்கையில் புனித நீராடுவதற்காக கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் தனது குடும்பத்தினருடன் சென்ற நபர் ஒருவர் தொலைந்து போன நிலையில் தற்போது மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் பாகல்பூரை சேர்ந்தவர் முகேஷ் யாதவ். இவர் கடந்த 2008ம் ஆண்டு தனது கிராமத்திலிருந்து பக்தர்களுடன் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கங்காசாகர் எனும் இடத்திற்கு கங்கையில் புனித நீராட சென்றிருந்தார். அங்கு தனியாக அறையெடுத்து தங்கிய பக்தர்கள் அடுத்த நாள் காலை திட்டமிட்டவாறு கங்கையில் புனித நீராடினர். இறுதியாக கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
ஆனால் அப்போதுதான் தங்களுடன் வந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதை முகேஷ் யாதவ் உணர்ந்திருக்கிறார். எனவே தன்னுடைய குழுவை பேருந்து நிறுத்தம் அருகில் இருக்க சொல்லிவிட்டு இவர் அப்பெண்ணை தேடி சென்றுள்ளார். இவர்கள் தங்கியிருந்த அறை, நீராடிய இடம், தரிசனம் செய்த கோயில் என எங்கு தேடியும் அப்பெண் கிடைக்கவில்லை.
சரியென அவர் மீண்டும் தனது குழு இருந்த இடத்திற்கு வந்துள்ளார். அங்கு வந்த பின்னர்தான் தெரிந்திருக்கிறது தொலைந்து போனது அந்த பெண் மட்டுமல்ல தானும் கூடதான் என்று. ஏனெனில் பேருந்து நிலையத்தில் தனக்காக காத்திருக்க சொன்ன குழு அங்கு இருக்கவில்லை. பின்னர் மீண்டும் தனது குழுவை தேட தொடங்கியுள்ளார். குழுவினருக்கு செல்போனில் அழைத்து பார்த்துள்ளார். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. எனவே மீண்டும் அறை, நீராடிய இடம், கோயில் என அதே இடத்தில் தேடியுள்ளார். எவ்வளவு தேடியும் அப்பெண்ணையும் கண்டுபிடிக்க முடியவில்லை, தனது குழுவையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஸ்விட்ச் ஆஃப்
பின்னர் சிறிது நேரம் கழித்து அவருடைய செல்போன் ஒலித்திருக்கிறது. மறுமுனையில் பேசிய பக்தர்கள் குழு தாங்கள் கிளம்பிட்டதாகவும் அடுத்த ரயில் பிடித்து ஊர் வந்து சேருமாறும் கூறியுள்ளது. ஆனால் இதற்கு யாதவ் மறுத்துவிட்டார். தான் அப்பெண் இல்லாமல் வீடு திரும்ப மாட்டேன் என்றும் சில நாட்கள் இங்கு தங்கி அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் சுமார் 5-6 நாட்கள் வரை யாதவ் தனது குடும்பத்தினருடன் செல்போனில் தொடர்பில் இருந்துள்ளார். ஆனால் அதன் பிறகு அவருடைய செல்போன் எண் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது.

நம்பிக்கை
எப்படி இருந்தாலும் யாதவ் பத்திரமாக வீடு வந்து சேர்ந்துவிடுவார் என அவருடைய குடும்பத்தினர் நம்பியுள்ளனர். ஆனால் ஒரு மாதம் ஆகியும் யாதவிடமிருந்து எந்த தகவலும் இல்லை. இதற்கிடையில் இவரை தேடி சிலர் கங்காசாகர் சென்றிருக்கின்றனர். அங்கு எவ்வளவு தேடியும் யாதவ் கிடைக்கவில்லை. காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இப்படியே 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கிடையில் இவரது தம்பிக்கு திருமணமாகியுள்ளது. பெற்றோர்கள் உயிரிழந்துவிட்டனர். தம்பியின் மகன் 10ம் வகுப்பு வரை போய்விட்டான்.

முயற்சி
இப்படி இருக்கையில் தனது அண்ணனை எப்படியாவது தேடி கண்டுபிடித்துவிட வேண்டும் என யாதவின் தம்பி யுகேஷ் சமூக வலைத்தளத்தில் யாதவின் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில், கொல்கத்தாவிலிருந்து விலங்குகள் நல ஆர்வலர் குழு ஒன்று பக்காலிக்கு சென்றிருக்கிறது. அங்கு ஞாபக மறதி கொண்ட நபர் ஒருவரை இக்குழுவினர் சந்தித்திருக்கிறார்கள். இவரிடம் செல்போன் உட்பட எதுவும் இல்லை. இவருக்கு உணவு அளித்து கிராமத்தினர் ஒருவர் தங்க வைத்துள்ளார். இவரிடம் இக்குழுவினர் பேச்சு கொடுத்துள்ளனர். ஆனால் இவருக்கு தனது பெயர் மற்றும் ஊரை தவிர வேறு எதையும் நினைவில் இருக்கவில்லை.

14 ஆண்டுகள் கழித்து
இதனையடுத்து இக்குழுவினர் 'ஹாம் ரேடியோவை' தொடர்பு கொண்டு இவர் குறித்த தகவல்களை தேடி பெற்றிருக்கின்றனர். பின்னர் இந்த நபர் தனது ஊர் என சொன்ன பீகாரின் பாகல்பூருக்கு சென்று இவருடைய புகைப்படத்தை காட்டி விசாரித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. இருந்தும் விடாமல் முயற்சி செய்து இவரது குடும்பத்தினரை கண்டுபிடித்துள்ளனர். கடைசியாக 14 ஆண்டுகள் கழித்து யாதவை அவரது சகோதரர் யுகேஷிடம் பத்திரமாக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அந்த ஊரில் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications