பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணை இன்று வெளியாகிறது? தேர்தல் ஆணையம் முக்கிய கூட்டம்
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கான பார்வையாளர்கள் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இதில், தேர்தலுக்கான அட்டவணை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் மட்டுமல்லாது, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான். ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாாக உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதியும் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பீகாரில் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. நிதிஷ் முதலமைச்சராக உள்ளார். இவரது கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் பீகாரின் முதலமைச்சராக நீடித்து வருகிறார். எனவே எதிர் வரும் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகிறார். ஆனால் 5-10 ஆண்டுகள் ஒரே ஆட்சி நீடிக்கிறது எனில் நிச்சயம் அதிருப்தி இருக்கத்தான் செய்யும். நிதிஷ் 20 ஆண்டுகளாக முதல்வராக இருக்கிறார். எனவே அக்கட்சியின் மீது அதிருப்தி மக்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.
இதை எதிர்க்கட்சிகள் தங்களது வாக்கு வங்கிகளாக மாற்றுமா? இல்லையா? என்பதே தேர்தல் முடிவுகளாக இருக்கும். எதிரணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கைகோர்த்திருக்கின்றன. இந்த கூட்டணி வலுவானதுதான். மூன்று கட்சிகளின் வாக்கு வங்கிகளும் சமீபத்திய தேர்தலில் அதிகரித்திருக்கின்றன. எனவே இந்த தேர்தலில் வாக்குறுதிகளை நிதிஷ்குமார் அள்ளி வீசியிருக்கிறார்.
மறுபுறம் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் பீகாரில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, கடந்த 9 மாதங்களில் பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து 38 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நீக்கத்தில் பெண்களின் விகிதம் ஆண்களை விட அதிகமாக உள்ளது, இது ஒரு குறிப்பிடத்தக்க போக்கைக் காட்டுகிறது. பெண் வாக்காளர்கள் 6.1% குறைந்திருக்க, ஆண் வாக்காளர்கள் 3.8% மட்டுமே குறைந்துள்ளனர். சிறப்புத் தீவிர மறுஆய்வு செயல்முறைக்குப் பிறகு வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலின்படி பீகாரில் வாக்காளர்களின் எண்ணிக்கை 38 லட்சத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
ஜனவரி 1 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் 7.8 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 7.41 கோடியாகக் குறைந்துள்ளது. இந்தச் சரிவு பாலின அடிப்படையில் வேறுபடுகிறது, இது ஒரு கவலையளிக்கும் போக்காக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். நடைமுறையில், 15.5 லட்சம் ஆண்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்க, 22.7 லட்சம் பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் பொருள், SIR செயல்பாட்டின் போது நீக்கப்பட்ட ஒவ்வொரு 10 பெயர்களில் சுமார் ஆறு பெயர்கள் பெண்களின் பெயர்கள் ஆகும்.
இந்த பாலின ஏற்றத்தாழ்வு மாநிலத்தின் பெரிய மாவட்டங்களிலும் தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக, முசாபர்பூரில் 1.22 லட்சம் வாக்காளர்கள் குறைந்திருக்க, இதில் பெண்களின் சரிவு (3.9%) ஆண்களின் சரிவை (3.4%) விட அதிகமாகும். மதுபனியில் 2.27 லட்சம் வாக்காளர்கள் குறைந்திருக்க, பெண் வாக்காளர்களில் 8.2% குறைவும், ஆண் வாக்காளர்களில் 5.5% குறைவும் பதிவாகியுள்ளது. பாட்னாவிலும் பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விகிதம் (4.1%) ஆண்களை (3.5%) விட அதிகம்.
சில மாவட்டங்களில் இந்த ஏற்றத்தாழ்வு இன்னும் தீவிரமாக உள்ளது. கோபால்கஞ்சில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் 11.3% குறைவு ஏற்பட்டது, இதில் பெண்களின் எண்ணிக்கை சுமார் 15% சரிந்தது, அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கை 7.8% குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications