‛‛ரெட்லைட் ஏரியா’’.. 40 பெண்களுக்கு ஒரேயொரு கணவர்.. பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் அதிகாரிகள் ஷாக்
பாட்னா: பீகாரில் உள்ள ‛ரெட்லைட் ஏரியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. அப்போது 40 பெண்கள் தங்களின் கணவராக ஒருநபரை மட்டுமே குறிப்பிட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்த சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.
பீகாரில் ஐக்கிய ஜனதாதளம்-ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் உள்ளார். லாலு பிரசாத்தின் மகனும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 2 கட்டங்களாக சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டது. பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு: கடந்த ஜனவரி மாதம் 7 ம் தேதி இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணி என்பது ரூ.500 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீகார் அரசு இந்த பயிற்சியை இரண்டு கட்டங்களாக நடத்தி வருகிறது.இந்நிலையில் தான் சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் ஒருவருக்கு 40 மனைவிகள் இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இது எப்படி வெளியுலகிற்கு தெரியவந்தது என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:
பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. இதில் ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ரெட்லைட்(பெண்கள் பாட்டுபாடி, நடனமாடி பிழைப்பு நடத்தும் பகுதி) ஏரியாவில் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இந்த வேளையில் அங்கு இருக்கும் அனைத்து பெண்களும் தங்களின் பெயர், விபரங்களை வழங்கினர். இந்த வேளையில் தான் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது சுமார் 40 பெண்கள், தங்களின் கணவர் பெயர் ரூப்சந்த் என தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகள் உடனடியாக அவர்களின் குழந்தைகளை வரவழைத்து தந்தை பெயர் என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர்களும் தங்களின் தந்தை பெயர் ரூப்சந்த் என தெரிவித்தனர். இதன்மூலம் ரூப்சந்த் என்பவர் 40 மனைவிகள் உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க இன்னொரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ரெட் லைட் ஏரியாவின் வார்டு 7ல் வசிக்கும் பெண்கள் பாடல்கள் பாடியும், நடனமாடி சம்பாதிப்பதையும் தொழிலாக வைத்துள்ளனர். இவர்களுக்கு என்று தனிப்பட்ட முகவரி என்பது இல்லை. இதனால் இந்த பெண்கள் தங்கள் கணவரின் பெயரை ரூப்சந்த் என கூறியுள்ளனர்.
இருப்பினும் இதுபற்றி அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருவதோடு, பீகாரின் அர்வால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதில் சிலரோ ரூப்சந்த் என்றால் பணம் என பொருள்படும். அதாவது ரெட்லைட் ஏரியாவில் வசிப்பவர்கள் பணத்தை மட்டுமே தங்களின் துணையாக நினைப்பதாலும், முகவரி இல்லாததாலும் ரூப்சந்த் என தெரிவித்து இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். இருப்பினும் உண்மை நிலை என்ன என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications