ஒரே மாதத்தில் 2 அட்டாக்! பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாதுகாப்பில் குறைபாடு? போலீசார் அதிரடி ஆக்ஷன்
பாட்னா: ஒரே மாதத்தில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மீது இரு முறை தாக்குதல் முயற்சி நடந்துள்ள நிலையில், இது தொடர்பாக அம்மாநில அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
பீகார் மாநிலத்தில் இப்போது ஐக்கிய ஜனதா தளம்- பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் உள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல் சம்பவம்
பீகார் மாநிலம் பக்தியார்பூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அவர் அங்கு இருந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இளைஞர் ஒருவர் முதல்வரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர். இருப்பினும், முதல்வர் அறிவுறுத்தல் படி அவர் விடுவிக்கப்பட்டார்.

இரண்டாம் சம்பவம்
இந்தச் சம்பவம் நடந்து சில வாரங்களில், அதாவது கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நாளந்தா மாவட்டத்தில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு வீசிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சுபம் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். தானும் தனது குடும்பத்தினரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து முதல்வர் நிதிஷ் குமாரின் கவனத்தை ஈர்க்கவே வெடிகுண்டு வீசியதாக அவர் குறிப்பிட்டார்.

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
சொந்த மாநிலத்திலேயே முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுகளில் இரு முறை பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முதல்வருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். இந்தச் சூழலில் முதல்வர் நிதிஷ் குமாருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் மேலும் 50 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

50 போலீசார்
அதாவது 3 ஆய்வாளர்கள், 11 துணை ஆய்வாளர்கள், 20 உதவி துணை ஆய்வாளர்கள், 18 கான்ஸ்டெபில்கள் என மொத்தம் 50 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், இனிமேல் முதல்வருக்குப் பல அடுக்கு பாதுகாப்பை வழங்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாநில சிறப்பு பாதுகாப்புப் படை
மேலும், முதலமைச்சரின் பாதுகாப்புப் பணி இனி மாநில சிறப்பு பாதுகாப்புப் படைக்கு (SSG) ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அது தாண்டி கூடுதல் பாதுகாப்பிற்காக மாநில சிறப்பு பாதுகாப்புப் படையும் களமிறக்கப்படும். இந்த மாநில சிறப்பு பாதுகாப்புப் படை போலீசார் தேசியப் பாதுகாப்புப் படைக்கு இணையான பயிற்சியைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications