பாட்னாவில் தேஜஸ்வி யாதவுடன் நிதிஷ்குமார் சந்திப்பு- சோனியா, ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி பயணம்!
பாட்னா: பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை பாட்னாவில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை நிதிஷ்குமார் சந்திக்க செல்வார் என்கின்றன தகவல்கள்.
Recommended Video
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது ஜேடியூ. இதனையடுத்து ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து முதல்வர் நிதிஷ்குமார் தமது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார். ஆளுநருடனான இந்த சந்திப்பின் போது ஜேடியூவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாட்னாவில் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை சந்தித்துப் பேசினார் நிதிஷ்குமார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் இருவரும் உரையாற்ற உள்ளனர்.

பீகாரில் பாஜக-ஜேடியூ ஆட்சி முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் ஆர்ஜேடி- ஜேடியூ-காங்கிரஸ்- இடதுசாரிகளின் புதிய கூட்டணி அரசு அமைய உள்ளது. முதல்வராக நிதிஷ்குமார் தொடருவார்; துணை முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவி ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு வழங்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்பட உள்ளது.
இதனிடையே பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்க நிதிஷ்குமார் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகார் புதிய ஆட்சியில் சபாநாயகர் பதவி மற்றும் 4 அமைச்சர் பதவியை காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பாக டெல்லி சந்திப்பின் போது சோனியா, ராகுலிடம் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்துவார் எனவும் கூறப்படுகிறது. இருந்த போதும் முதல்வர் பதவி ஏற்ற பின்னர் நிதிஷ்குமார் டெல்லி செல்வாரா? அல்லது அதற்கு முன்னர் டெல்லி செல்வாரா? என்பது உறுதியாகவில்லை.
பீகார் அரசியல் இப்படி பரபரத்துக் கொண்டிருக்க, லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் பீகாரில் சட்டசபையைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பீகாரில் பாஜக- ஜேடியூ இடையேயான மோதலுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்ததே லோக் ஜனசக்திதான். சட்டசபை தேர்தலின் போது ஜேடியூவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியது லோக் ஜன சக்திதான். ஆனால் பாஜக இதனை பொருட்படுத்தாமல் லோக் ஜனசக்தியுடன் கூட்டணிவைத்துக் கொண்டது. கடந்த 2 ஆண்டுகளாக நிதிஷ்குமார் அரசை கடுமையாக லோக் ஜனசக்தி விமர்சித்தாலும் பாஜக தமது கூட்டங்களில் அக்கட்சியை பங்கேற்க அழைத்தும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications