நடிகர் சுஷாந்த் வழக்கை விசாரித்த பீகார் டிஜிபி விருப்ப ஓய்வு... பீகாரில் பாஜக சார்பில் போட்டியா?
பாட்னா: பீகாரில் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த போலீஸ் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவர் அந்த மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை இவரது பணிக்காலம் இருக்கும்போது, திடீரென இவர் விருப்ப ஓய்வு பெற்று இருக்கிறார். இவர் பாஜக சார்பில் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக விருப்ப ஓய்வு பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

நிதிஷ் குமார்
இவரைப் போலவே டிஜியாக இருந்த இவரது குழுவைச் சேர்ந்த சுனில் குமார் கடந்த ஜூலை 31 ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்று முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். இவரும் வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

நோட்டீஸ்
இவரை பணியில் இருந்து விடுவிப்பதாக உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய் கிழமை இரவு நோட்டீஸ் வெளியிட்டு இருந்தது. விருப்ப ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த நடைமுறையை பாண்டே பின்பற்றவில்லை. இந்த நடைமுறை பாண்டே விஷயத்தில் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவமரியாதை
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்கு மும்பை சென்று இருந்த பீகார் போலீசாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், இதற்காக தான் போராடப் போவதாகவும் அறிவித்து இருந்தார். மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை விமர்சிப்பதற்கு ரியா சக்ரவர்த்திக்கு தகுதி இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

போராட்டம்
இவரது விருப்ப ஓய்வு குறித்து பாண்டே அளித்த பேட்டியில், ''விருப்ப ஓய்வு எடுப்பதற்கு அரசியலமைப்புச் சட்டப்படி அனைத்து அதிகாரங்களும் எனக்கு உள்ளது. விசாரணைக்காக பீகாரில் இருந்து போலீசார் மும்பை சென்றபோது அவர்களை அவமதித்துள்ளனர். பீகார் மக்களின் கவுரவத்திற்காக போராட இருக்கிறேன். என்னுடைய விருப்ப ஓய்வையும் சுஷாந்த் மரணத்துடன் இணைத்துப் பேசக் கூடாது.

சமரசம்
என்னுடைய 34 ஆண்டுகள் பணியில் நான் யாருடனும் சமரசம் செய்து கொண்டது இல்லை. 50 என்கவுண்டர்களை நடத்தி உள்ளேன். எந்த அரசியல் கட்சியிலும் நான் சேரவில்லை. சமூகப் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அரசியலில் சேராமலே இதை செய்யலாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications