தாவுவதற்கு தயாரான அமைச்சர்..குறுக்கே பாய்ந்து டிஸ்மிஸ் செய்த நிதீஷ் குமார்.. பீகாரில் கலகல!
பாட்னா: பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு தாவுவதற்கு தயாராக இருந்த ஷ்யாம் ரசாக்கை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் நிதிஷ் குமார் நீக்கியுள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து ஷ்யாமை நீக்குவதற்கான பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
பீகார் மாநிலத்தின் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் ஷ்யாம் ரசாக். இவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு தாவுவதற்கு தயாராக இருந்தார். (ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை தற்போது லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் வழிநடத்திச் செல்கிறார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு சிறையில் இருக்கிறார்) இதை மோப்பம் பிடித்த முதல்வர் நிதிஷ் அவரது அமைச்சர் பதவியை பறித்தார். உடனே அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஆளுநர் பகு சவுகானுக்கு பரிந்துரை செய்தார். அவரும் நிதிஷ் குமாரின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டார்.

பீகார் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், முதல்வர் நிதிஷ் குமாருக்கான ஆதரவு சரிந்து வருகிறது. அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலும் சல சலப்பு ஏற்பட்டுள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் முயற்சித்து வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டது. இதற்குப் பின்னர் கூட்டணி கட்சிகளை கழற்றி விட்டு, பாஜகவுடன் இணைந்து கொண்டது. 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருந்தது. இதை கடுமையாக எதிர்த்தவர் நிதிஷ் குமார்.
2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தார் நிதிஷ். முந்தைய தேர்தலில் 20 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்த நிதிஷ், 2014 தேர்தலில் வெறும் 2 இடங்களில் வெற்றி பெற்றார். இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். 2015ல் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார்.
தற்போது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு இருக்கும் ஷ்யாம், கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு இருந்ததால், கட்சி தாவுவதற்கு திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இவர் எப்படியும் கட்சியில் இருந்து கழற்றிவிடப்படலாம் என்று சிக்னல் கிடைத்த பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைவதற்கு முடிவு எடுத்து இருக்கிறார். இதற்கு முன்னதாக இவர் தனது முதன்மை செயலாளரை மாற்றுமாறு நிதிஷ் குமாருக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
மாநிலத்தில் தலித் விஷயத்தில் எதிர்மறையான முடிவுகளை ஷ்யாம் எடுத்து வந்ததாகவும் இது மத்திய அரசுக்கு நெருடலை ஏற்படுத்தியது என்பதால் நீக்கப்பட்டு இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக தொழில் துறை அமைச்சராக தலித் எம்.எல்.ஏ.வான அருண் மசவ்ரி நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
பீகாரில் மாநிலத்தில் தேர்தல் தேதியை இன்னும் தேர்தல் கமிஷன் அறிவிக்கவில்லை. நடப்பாண்டில் வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் நிதிஷ் குமாரின் ஆட்சிக் காலம் நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications