பீகாரில் மேஜிக் நம்பரை தாண்டிய என்டிஏ கூட்டணி! நிதிஷ் கட்சியை விட அதிக இடங்களில் பாஜக அபாரம்!
பாட்னா: பீகாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை என்கிற போது என்டிஏ கூட்டணி 64 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 139 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் மேஜிக் நம்பரை ஐக்கிய ஜனதா தளம்+ பாஜக கூட்டணி தாண்டி சாதனை படைத்துள்ளது. மேலும் பீகாரில் 90 இடங்களில் முன்னிலை வகித்து பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
243 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட பீகாருக்கு, சட்டசபை தேர்தல், கடந்த 6ஆம் தேதியும் 11ஆம் தேதியும் என இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. 67.13 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல்வர் வேட்பாளர்களாக பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரும் (ஐக்கிய ஜனதா தளம்), மகா கூட்டணியின் தேஜஸ்வி யாதவும் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) களமிறங்குகிறார்கள்.

இந்த தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்டியிடுகிறார்கள். அது போல் மகா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 61 இடங்களிலும், ஆர்ஜேடி கட்சி 143 இடங்களிலும் போட்டியிடுகிறது.
பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். அதில் 3.92 கோடி ஆண் வாக்காளர்களும், 3.5 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். முதல் கட்ட தேர்தலில் 65.08 சதவீதமும் இரண்டாவது கட்ட தேர்தலில் 68.76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, இது பீகார் தேர்தல் வரலாற்றில் மிகவும் அதிகமாகும். இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின் படி ஜேடியூ 23 இடங்களில் வென்று 60 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அது போல் பாஜக 34 இடங்களில் வென்று 56 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 2 இடங்களில் வென்று, 17 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. ஆர்ஜேடி 5 இடங்களில் வென்றும் 21 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 1 இடத்தில் வென்று 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
பீகாரில் ஆட்சியை பிடிக்க 122 இடங்களில் பெரும்பான்மை தேவைப்படுகிறது. தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் என்டிஏ+ நிதிஷ் கூட்டணி 139 இடங்களில் முன்னிலை வகித்தும் 59 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. 6 இடங்களில் வென்றுள்ளது.
ஆர்ஜேடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பாரதி கூறியிருப்பதாவது: பீகாரில் ஆட்சி மாற போகிறது, மக்களின் 20 ஆண்டு கால காத்திருப்புக்கு தற்போது முடிவு கிடைக்க போகிறது. ஒட்டுமொத்த நாட்டுக்கும் வரலாறு எழுதப்படுகிறது. மிகவும் இளம் முதல்வரை இந்த நாடு பார்க்க போகிறது என தெரிவித்திருந்தார். அது போல் தேஜஸ்வியும், "பீகாரில் மாற்றம் நிகழ போகிறது. கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி மகா கூட்டணி வெல்லும்" என தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் ஆர்ஜேடிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளன. கடந்த முறையை காட்டிலும் மிக குறைந்த இடங்களிலேயே வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications