பீகார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் வெற்றி- திடீர் மாயமாகி பரபரப்பை கிளப்பிய 6 எம்எல்ஏக்கள்!
பாட்னா: பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது. முன்னதாக நேற்று முதலே 6 ஜேடியூ எம்.எல்.ஏக்கள் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பின்னர் அடங்கியது.
பீகார் மாநிலத்தில் 4 ஆண்டுகளில் 2 முறை கூட்டணிகளை மாற்றி 3-வது முறையாக முதல்வராகி இருக்கிறார் நிதிஷ்குமார். முதல்வர் நிதிஷ்குமாரின் புதிய பாஜக- ஜேடியூ கூட்டணி அரசு மீது பீகார் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

பீகார் சட்டசபை பலம் என்ன?: பீகார் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 243. பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள். முதல்வர் நிதிஷ்குமாரின் ஆளும் பாஜக-ஜேடியூ அரசுக்கு மொத்தம் 128 எம்.எல்.ஏக்கள் ஆதரவு. பாஜக- 78; ஜேடியூ 45; ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா- 4; சுயேட்சை-1. லாலுவின் ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகளான எதிர்க்கட்சிகளுக்கு மொத்தம் 114 எம்.எல்.ஏக்கள் ஆதரவு. ஆர்ஜேடி 79, காங்கிரஸ் 19, இடதுசாரிகள் 16 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஓவைசியின் மஜ்லிஸ் கட்சிக்கு 1 எம்.எல்.ஏ.
நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் வெற்றி: இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின் போது ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் 3 பேர் அரசு பக்கம் அமர்ந்திருந்தனர். பெரும்பான்மைக்கு தேவை 122 என்ற நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக 129 எம். எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.
பரபரப்பை ஏற்படுத்திய 6 எம்.எல்.ஏக்கள்: முன்னதாக திடீரென நிதிஷ்குமாரின் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்கள் நேற்று முதலே தொடர்பு எல்லைக்குள் அப்பால் இருந்தனர். பீகார் நிதி அமைச்சர் விஜய்குமார் சவுத்ரி வீட்டில் நேற்று ஜேடியூ எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் 6 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. இவர்களில் சிலர் பீகார் மாநிலத்தை விட்டு வெளியே சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இவர்களில் சிலரை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடத்தி வைத்திருப்பதாக கூறப்பட்டது. இதனால் தேஜஸ்வி யாதவ் வீட்டுக்கும் போலீசார் சென்றனர். இதற்கு எதிராக ஆர்ஜேடி கட்சியினர் போராட்டம் நடத்த பாட்னா பெரும் போர்க்களமானது.
ரிசார்ட் அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பை முன்வைத்து பாஜகவும் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியும் போட்டி போட்டுக் கொண்டு எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டுகளில் தங்க வைத்தன. காங்கிரஸ் கட்சி தமது எம்.எல்.ஏக்களை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்து பாதுகாத்து வந்தது. இவர்கள் அனைவரும் பாட்னா திரும்பி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
3 -வது முறை முதல்வர்: பீகாரில் 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் கூட்டணி கட்சியான ஜேடியூவின் நிதிஷ்குமாரை முதல்வராக்கியது. ஆனால் 2 ஆண்டுகளில் பாஜகவுடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்துக் கொண்டு பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் உடனடியாக ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகளுடன் இணைந்து மீண்டும் முதல்வரானார் நிதிஷ்குமார். தற்போது இந்த கூட்டணியையும் முறித்துக் கொண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார். இப்போது பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி வென்றுள்ளார் நிதிஷ்குமார்.












Click it and Unblock the Notifications