அடப்பாவமே.. பீகாரில் 100-க்கு 151 மார்க் எடுத்த மாணவன்! இது சாதனையா? சோதனையா?
பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இளநிலை படித்த மாணவன் புரொவைசனல் சர்டிபிக்கட்டில் 100-க்கு 151 மதிப்பெண் போட்டுள்ள சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் கேலி, கிண்டலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கல்வியின் தரம் தென் மாநிலங்களோடு ஒப்பிடுகையில் வட இந்தியாவில் சற்று குறைவாகவே உளளது என்பதே கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
அது மட்டும் இன்றி வட மாநிலங்களில் தேர்வின் போது காப்பி அடிக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியாகும்.

தேர்வில் காப்பி அடிக்கும் சம்பவம்
இன்னும் சொல்லப்போனால், பல இடங்களில் மாணவர்களின் பெற்றோர்களே தேர்வில் காப்பி அடிக்க நோட்ஸ் கொடுத்து உதவும் காட்சிகள் கூட தேசிய ஊடகங்களில் வெளியாகி விவாதப்பொருளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பீகாரில் கடந்த 2016- ஆம் ஆண்டு பள்ளி இறுதியாண்டு பொதுத் தேர்வில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு காப்பி அடிக்க நோட்ஸ் கொடுத்து உதவிய காட்சிகள் நாடு முழுக்க வெளியாகி பேசுபொருளாகியிருந்தது. அந்த தேர்வில் டாப் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க தெரியாமல் திரு திருவென முழித்ததையும் ஊடகங்கள் வெளியிட்டு அங்குள்ள சூழலை அம்பலப்படுத்தின.

100-க்கு 151 மதிப்பெண்
ஒட்டுமொத்தமாக பீகார் முழுவதும் இப்படி நடக்கிறது என்று சொல்லாவிட்டாலும் இன்னமும் அங்கு இப்படிப்பட்ட அவல நிலை தொடரத்தான் செய்கிறது கவலை அளிக்கும் செய்தியாக உள்ளது. அந்த வகையில், பீகாரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் 100- க்கு 151 மதிப்பெண் போடப்பட்டுள்ள சம்பவம் நகைப்பைக்குரிய வகையிலும், கல்வியின் தரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. பீகார் மாநில அரசால் நடத்தப்படும் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவருக்கு 100-க்கு 151 மதிப்பெண் போடப்பட்டுள்ளது.

'எனக்கே ஆச்சரியமாக உள்ளது'
இதைப்பார்த்து வியந்துபோன அந்த மாணவர், எனது புரொவிசனல் சான்றிதழில் இப்படி மார்க் போடப்பட்டுள்ளது வியப்பளிக்கிறது. முடிவுகளை வெளியிடும் முன்பாக கண்டிப்பாக அதிகாரிகள் செக் செய்து இருப்பார்கள். ஆனால், இதையும் மீறி எப்படி இதுபோன்ற தவறுகள் நடந்தது என்பதை பார்க்கும் போது எனக்கே வியப்பாகத்தான் உள்ளது" என்றார். இது மட்டும் அல்ல.. இதே பல்கலைக்கழகத்தில் பி.காம் படிக்கும் மாணவர் ஒருவருக்கு அக்கவுண்டிங் மற்றும் பினான்சிங் பரீட்சையில் ஜீரோ மதிப்பெண் போடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் பதில்
இது குறித்து விளக்கம் அளித்த பல்கலைக்கழகம், ''இரண்டு சம்பவங்களுமே அச்சுப்பிழை (டைப்பிங் எர்ரர்) காரணமாக நடைபெற்றதுதான். அச்சுப்பிழையை சரி செய்து தற்போது புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரிதுபடுத்த ஒன்னும் இல்லை'' என மழுப்பலாக தெரிவித்து விட்டது. எனினும், மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடைய மதிப்பெண் சான்றிதழில் இவ்வளவு அஜாக்கிரதையாக பல்கலைக்கழக நிர்வாகம் கையாள வேண்டுமா? என பெற்றோர்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதேபோல நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கேலி கிண்டலாய் பதிலளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications